கோவை மாவட்டம் பெரிய நாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் திலகா. திலகா மற்றும் அவரது கணவர் முத்து ஆகியோர் யூடியூபில் விழிப்புணர்வு மற்றும் சினிமா அப்டேட் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் யூடியூபரான ரவுடி பேபி சூர்யாவிற்கும், திலகாவிற்கும் இடையே மோதல் இருந்து வந்துள்ளது. சுப்பு லட்சுமி என்கிற ரவுடி பேபி சூர்யா நடத்தி வரும் சூர்யா மீடியா மற்றும் சிக்கந்தர்ஷா என்கிற சிக்கா நடத்தி வரும் சிங்கர் சிக்கா ஆபிசியல் என்ற யூடியூப் சேனல்களில் திலகாவை பற்றி மிகவும் இழிவாகவும், ஆபாசமாகவும் உருவ கேலி செய்தும் தொடர்ந்து பேசி வந்துள்ளார். மேலும் தொடர்ந்து சமூக இணையதளத்தில் ஆபாசமாகவும், இழிவாகவும் பார்ப்பவர்களை முகம் சுழிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டு வரும் ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு, கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினரிடம் புகார் அளித்தார்.


அந்த புகாரில் திலகாவின் 10 வயது மகள் ஆன்லைன் மூலம் பாடங்கள் பயில்வதில் உள்ள பிரச்னைகள் தொடர்பாக பேசிய காணொலியை அவர்களது யூடியூபில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோவிற்கு பதிவிட்ட ரவுடி பேபி சூர்யா, அவதூறு வார்த்தைகளை பயன்படுத்தியதாகவும், இது தொடர்பாக தம்பதிகளும், சூர்யாவின் யூடியூப் லைவ்வில் பதிலளிக்க, அங்கும் சூர்யா, மோசமான வார்த்தைகளால் பேசியதோடு, கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தம்பதிகளின் செல்போன் எண்களை தனது எண் என தனது யூடியூப் வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாகவும், இதனால் பலரும் சூர்யா என நினைத்து மோசமான வார்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்தாக தெரிவித்தார்.




இதையடுத்து பாலியல் ரீதியாக பேசுதல், பெண்களை இழிவாக பேசுதல், தகவல் தொழில் நுட்ப சட்டம், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். மதுரையில் தங்கியிருந்த திருப்பூரை சேர்ந்த சுப்புலட்சுமி என்கிற ரவுடி பேபி சூர்யா (35), அவரது நண்பர் மதுரையை சேர்ந்த சிக்கந்தர் என்கிற சிக்கா (48) ஆகிய இருவரையும் தனிப்படை காவல் துறையினர் கடந்த ஜனவரி 4 ம் தேதி கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 3 செல்போன்களை பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.


இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிறையில் உள்ள சிக்கந்தர்ஷா என்கிற சிக்கா மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில் ரவுடி பேபி சூர்யா மீதும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் பரிந்துரை செய்தார். இதன் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், ரவுடி பேபி சூர்யாவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் அடைக்க கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகலை சிறையில் உள்ள ரவுடி பேபி சூர்யாவிடம் காவல் துறையினர் வழங்கினர்.