கோவை மாவட்டத்தில் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் தொண்டாமுத்தூர் காவல் நிலைய பகுதியில் உயர் ரக போதை பொருள் விற்பனை செய்வதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.


இதன்பேரில் தொண்டாமுத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது தொண்டாமுத்தூர் கிழ‌க்கு தெருவில் உள்ள தனியார் பாக்கு செட்டில் சோதனை செய்தபோது, சுமார் 18 முதல் 20 மில்லி கிராம் அளவுள்ள உயர் ரக போதை பொருள் அடங்கிய பிளாஸ்டிக் குப்பிகள் மொத்தம் 175 குப்பிகள் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.


இதனைத்தொடர்ந்து காவல் துறையினர் விசாரணை செய்ததில் அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த ஜாகிர் உசேன் (36)  என்பவர் அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து போதை பொருட்களை கடத்தி வந்து, பாக்கு செட்டில் வேலை செய்து வரும் அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த அஸ்மா (40) என்பவர் மூலம் விற்பனை செய்வது தெரியவந்தது.


பி‌ன்ன‌ர் காவ‌ல் துறை‌யின‌ர் ஜாகிர் உசேன் (36) மற்றும் அஸ்மா (40) ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த 5 லட்சம் மதிப்புள்ள சுமார் 25 கிராம் எடையுள்ள உயர் ரக போதை பொருட்கள், பிளாஸ்டிக் குப்பிகள் மற்றும் 100 கிராம் கஞ்சா ஆகியவற்றை  பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் நீதிமன்றக் காவலில் எடுத்து, சிறையில் அடைத்தனர்.




இதேபோல சுல்தான்பேட்டை காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் செஞ்சேரி பிரிவு அருகே உள்ள தனியார் தோட்டத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுபாஷ் பாஃக் (24) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 1.100 கிலோ கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


கோவை மாவட்டத்தில் போதை பொருட்களின் விற்பனையை தடுக்கும் பொருட்டும், அதன் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டும் காவல் துறையினர் எடுத்த நடவடிக்கைகளால், இந்தாண்டில் மட்டும் தற்போது வரை போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 474 நபர்கள் மீது 353 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்களிடமிருந்து சுமார் 661.676 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் எச்சரித்துள்ளார்.


போதைப்பொருட்கள் விற்பனை தொடர்பாக பொதுமக்கள் காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 ஆகிய எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் எனக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.