கோவை மாவட்ட காவல் துறையின் கண்காணிப்பு மற்றும் அவசர நடவடிக்கைகளை மேலும் தொழில்நுட்ப ரீதியாக வலுப்படுத்தும் வகையில், “மாஸ்டர் கமாண்ட் அண்ட் கண்ட்ரோல் சென்டர்” (MCCC) எனும் அதிநவீன கட்டுப்பாட்டு மையம் கோவையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. சுமார் 3,000 சதுர அடி பரப்பளவில், கோவை மாவட்ட காவல் அலுவலகத்தின் 4-வது மாடியில் அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன் குமார் திறந்து வைத்தார்.
போலீஸின் புதிய ஸ்மார்ட் திட்டம்
திறப்பு விழாவில் மேற்கு மண்டல காவல் துறை தலைவர் ரம்யா பாரதி, கோவை சரக காவல் துணை தலைவர் சாமிநாதன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கே. கார்த்திகேயன் IPS, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் IAS உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
24 மணி நேரமும் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மையத்தில், மாவட்டம் முழுவதும் பொருத்தப்பட்டுள்ள 1,500-க்கும் மேற்பட்ட CCTV மற்றும் ANPR (Automatic Number Plate Recognition) கேமராக்கள் ஒரே இடத்தில் இருந்து நேரடியாக கண்காணிக்கப்பட உள்ளன. மத்திய LED வீடியோ வால் மற்றும் மேம்பட்ட கண்காணிப்பு மென்பொருட்கள் மூலம் முக்கிய பகுதிகள், எல்லைப் பாதுகாப்பு சாவடிகள் மற்றும் பொது இடங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.
மேலும், அனைத்து காவல் நிலையங்களின் கண்காணிப்பு வெப்கேம்கள், ‘டயல்-100’ அவசர உதவி சேவை, Kakki Beat மற்றும் Smart Kavalar செயலிகள், சமூக ஊடக கண்காணிப்பு பிரிவு, சைபர் கிரைம், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவு, NDPS பிரிவு உள்ளிட்டவை இந்த ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த நவீன தொழில்நுட்ப வசதிகள் மூலம் குற்றவாளிகளின் நடமாட்டத்தை உடனுக்குடன் கண்டறிந்து குற்றச் சம்பவங்களை குறைக்க முடியும் என்றும், பொதுமக்களின் புகார்களுக்கு விரைவான மற்றும் வெளிப்படையான நடவடிக்கை எடுக்க இந்த மையம் பெரிதும் உதவும் என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
