புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுபாடுகளை மீறி செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வருகின்ற 2024 ஆம் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான நெறிமுறை மற்றும் வழிகாட்டுதல் குறித்து பேசினார். மேலும் புத்தாண்டு பண்டிகை முன்னிட்டு மாநகர பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளும் காவல் துறையினரின் பணிகள் குறித்தும் எடுத்துரைத்தார். முன்னதாக புத்தாண்டு பண்டிகைக்கு நட்சத்திர விடுதிகளில் நடைபெறும் கொண்டாட்டங்களுக்கான வரைமுறையை ஹோட்டல் பணியாளர்களிடம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மேலும் நள்ளிரவு ஒரு மணியுடன் அனைத்து கொண்டாட்டங்களை முடித்துக் கொண்டு விடுதிகள் மூடப்பட வேண்டும் எனவும், போதை பொருட்கள் போன்றவை விற்பனையோ பயன்படுத்தவோ அனுமதிக்க கூடாது எனவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மாநகர பகுதியில் உள்ள நட்சத்திர விடுதியின் உரிமையாளர் மற்றும் மேலாளர்கள் கூட்டத்திற்கு வந்திருந்தனர்.


இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், “புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு 2 ஆயிரம் போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். கோவில், சர்ச், பள்ளிவாசல் போன்ற தளங்களில் பலத்த பாதுகாப்பு அளிக்கப்படும். மது போதையில் வாகனம் ஒட்டுபவர்களை தடுக்க தடுப்புகள் வைத்து காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். செக்போஸ்ட்கள் கூடுதலாக அமைக்கப்படும். புத்தாண்டு கொண்டாட்டம் நடைப்பெறும் அரங்குகளுக்கு நெறிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது.


போதைப் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மகிழ்ச்சியான நாளான புத்தாண்டை கொண்டாட காவல்துறை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநகரில் உள்ள மேம்பாலங்கள் அடைக்கப்படும். அதில் அவசர தேவைக்கான வாகனங்கள் அனுமதி வழங்கப்படும். ரோந்து காவலர்கள் அதிகளவில் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். மக்களுடன் புத்தாண்டு கொண்டாட வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் கொண்டாடுவோம். பாதுகாப்பு அளிப்பது பிரதான பணி நடைப்பெறவுள்ளது. விபத்து இல்லாத புத்தாண்டுகளாக கொண்டாட நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.