பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஐஸ்கிரீம் குச்சிகளில் ஆயிரத்து 330 திருக்குறளை எழுதி பொள்ளாச்சியை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை அசத்தியுள்ளார்.


கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சின்னாம்பாளையம் பகுதி சேர்ந்தவர் கீதா. அறிவியல் பட்டதாரி ஆசிரியரான இவர்,  ஏரிப்பட்டி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியைராக பணி புரிந்து வருகிறார். தமிழ் மொழி மீதும், திருக்குறள் மீதும் அதிகம் அதிக பற்று கொண்ட ஆசிரியர் கீதா, திருக்குறளையும் அதில் உள்ள வாழ்க்கை முறை கருத்துக்களையும், மாணவர்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் ஆயிரத்து 330 திருக்குறளை நோட்டில் எழுதி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் தன்னிடம் பயின்று வரும் மாணவர்களும் மட்டுமல்லாமல், அனைத்து தரப்பு மாணவர்களும் பொது மக்களும் திருக்குறள்களை அறிந்து கொள்ளும் வகையில் ஐஸ்கிரீம் குச்சிகளில் ஆயிரத்து 330 திருக்குறளை எழுதியுள்ளார். மேலும் அந்த ஐஸ்கிரீம் குச்சிகளில் எழுதப்பட்ட திருக்குறள்களை பல்வேறு இடங்களில் நடைபெறும் கண்காட்சியில் வைத்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.




கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தமிழக கல்வித் துறை சார்பில் தென்கொரியாவில் தமிழ் சங்கம் சார்பில் நடைபெற்ற வானவில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அறிவியல் பட்டதாரி ஆசிரியர் கீதா,  ஐஸ்கிரீம் குச்சியில் எழுதிய ஆயிரத்து 330 திருக்குறளில் 650 திருக்குறளை எழுதிய குச்சியை தென் கொரியா தமிழ் சங்கத்திற்கு பரிசாக வழங்கினார். மீதமுள்ள ஐஸ்கிரீம் குச்சியில் எழுதிய திருக்குறளை மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கண்காட்சியாக ஆங்காங்கே வைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். கொரோனா முழு அடைப்பு காலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நாட்களில் வீட்டிலிருந்து மாணவர்களுக்கு பாடம் எடுத்ததற்காக தமிழக அரசு சார்பில் நல்லாசிரியர் விருதும் கடந்த 2021 ஆம் ஆண்டு வழங்கப்பட்டுள்ளது.




இதுகுறித்து ஆசிரியர் கீதா கூறுகையில், உலகப் பொதுமறையான திருக்குறளில் சொல்லாத கருத்துக்களை இல்லை, அந்த கருத்துக்கள் குறித்து மாணவர்கள், பொதுமக்கள் இடையே விழிப்புணர்வை வெளிப்படுத்தும் வகையில் ஐஸ்கிரீம் குச்சியில் திருக்குறளை எழுதி இருப்பதாகவும், மாணவர்களுக்கு திருக்குறளை மனப்பாடம் செய்ய வைக்கும் முயற்சியில் ஐஸ்கிரீம் குச்சியில் எழுதி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.