ஐடி நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் முதல் கூலி வேலை செய்பவர்கள் வரை அனைத்து தரப்பினரும் விரும்பி அருந்தும் பானமாக டீ, காபி இருந்து வருகின்றன. பலருக்கும் இவற்றை குடித்தால்தான் வேலையே ஓடும் என்கிற வகையில் மக்களின் உணவு பழக்கவழக்கத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியிருக்கின்றன. சென்னையில் உள்ள பெரும்பாலான டீக்கடைகளில் தற்போது டீ ரூ.12-க்கும், காபி ரூ.15-க்கும் விற்பனையாகி வருகிறது. இது தவிர சிறிய அளவிலான கடைகளில் டீ ரூ.10-க்கும், காபி ரூ.12-க்கும் விற்பனையாகிறது.
இந்நிலையில் சென்னையில் பல்வேறு இடங்களில் டீயின் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. கோயம்பேடு, அடையாறு, மயிலாப்பூர், திருவான்மியூர், புரசைவாக்கம் உட்பட பல்வேறு இடங்களில் உள்ள டீக்கடைகளின் முகப்பில் நேற்று டீ, காபி, பூஸ்ட், ஹார்லிக்ஸ் உள்ளிட்டவற்றின் விலை (செப். 1) முதல் உயர்த்தப்படுவதாக நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தன. அதன்படி டீயின் விலை ரூ.15 ஆகவும், காபியின் விலை ரூ.20 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் லெமன் டீ - 15, பால் - ரூ.15, ஸ்பெஷல் டீ - 20, ராகிமால்ட், சுக்கு காபி - ரூ.20, ஹார்லிக்ஸ், பூஸ்ட் - ரூ.25 ஆகவும் விற்பனை செய்யப்பட உள்ளன. பார்சல் டீ ரூ.45 ஆகவும், பார்சல் காபி ரூ.60 ஆகவும், பார்சல் பூஸ்ட் ரூ.70 ஆகவும் விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பஜ்ஜி, போண்டா, சமோசா ஒன்றுக்கு ரூ.15 வசூலிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு டீ, காபி ஆகியவற்றின் விலை உயர்த்தப்பட்டது. இதில், டீ ரூ.15, காபி ரூ. 20 என உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வு டீ, காபி பிரியர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், தற்போது கோயம்புத்தூர் மாவட்டத்திலும் டீ மற்றும் காபியின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதில், சென்னையில் தற்போது டீ, காபி உள்ளிட்டவற்றின் விலை உயர்த்தப்பட்ட பின் என்ன விலை இருக்குமோ, அதே விலை கோவையிலும் இருந்து வந்தது. ஆனால் தற்போது, அந்த விலையும் கூடுதலாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதில், டீ ரூ. 20, காபி ரூ. 26, பிளாக் டீ உள்ளிட்டவை ரூ. 17 என உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு சாலையோர மற்றும் பேருந்து நிலையங்கள் ஆகியவற்றில் செயல்படும் டீ கடைகளில் உயர்த்தப்பட்டுள்ளது. இதை தவிர்த்து சில முன்னணி பேக்கரிகள், ரெஸ்டாரண்டுகள், அமர்ந்து டீ அருந்தும் கடைகள் உள்ளிட்டவற்றில் 5 சதவீத ஜிஎஸ்டி தொகையுடன் டீ, காபி உள்ளிட்டவற்றின் விலை வசூலிக்கப்படுகிறது. இதே போல, இஞ்சி டீ, பூஸ்ட், கார்லிக்ஸ் உள்ளிட்டவை ரூ. 30- ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேக்கரி சங்கத்தினர்கள் கூறுகையில், டீ, காபி ஆகியவற்றின் தூள்கள், பால், போக்குவரத்து ஆகியற்றின் விலை உயர்வால் டீ, காபி உள்ளிட்டவற்றின் விலை உயர்த்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். இதே போல பிரபலமான முன்னணி பேக்கரிகளிலும் இதே விலை வசூலிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான விலை அறிவிப்பு பட்டியல் அனைத்து கடைகளிலும் ஒட்டப்பட்டுள்ளன. இதில், சென்னையுடன் ஒப்பிடுகையில் கோயம்புத்தூரில் டீ மற்றும் காபி உள்ளிட்டவற்றின் விலை சற்று அதிகமாகவே உள்ளது. பொதுமக்கள் மத்தியில் அத்தியாவசியமாகவும், புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் விதமாகவும் இருக்கக்கூடிய டீ மற்றும் காபி ஆகியவற்றின் விலை உயர்வு பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதே போல, டீ, காபி பிரியர்களும் கடும் அதிர்ச்சியில் உரைந்து போய் உள்ளனர்.