Myv3 ads: மைவி3 ஏட்ஸ் நிறுவனம் வேறு பெயரில் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக புகார்

மைவி3 ஏட்ஸ் நிறுவனம் வி3 ஆன்லைன் டிவி என்ற பெயரில் ஆயிரக்கணக்கானோரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக, பாதிக்கப்படட்வர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

Continues below advertisement

செல்போனில் விளம்பரம் பார்ப்பதன் மூலம் வருமானம் பார்க்கலாம் என ஆசைக்காட்டி மோசடி செய்ததாகவும், மருத்துவர்கள் பரிந்துரையின்றி மாத்திரைகளை விற்பனை செய்ததாகவும் மைவி3 ஏட்ஸ் என்ற நிறுவனத்தின் மீது, அண்மையில் கோவை மாநகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து கடந்த 29ம் தேதியன்று அந்த நிறுவனத்திற்கு ஆதரவாகவும், பொய் புகார் அளிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறி 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நீலாம்பூர் பகுதியில் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மைவி3 ஏட்ஸ் நிறுவனம் வி3 ஆன்லைன் டிவி என்ற பெயரில் ஆயிரக்கணக்கானோரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக, பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

Continues below advertisement

அப்போது அந்நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்த ஸ்டாலின் என்பவர் கூறுகையில், ”கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வி3 ஆன்லைன் டிவி என்ற நிறுவனத்தை விஜயராகவன், குமாரி, சிவசங்கர் ஆகியோர் இணைந்து துவங்கினர். கோவை காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் இந்த நிறுவனத்தின் அலுவலகம் இயங்கி வந்தது. 600 ரூபாய் செலுத்தி ஒரு தயாரிப்பை வாங்கிய பின்னர், விளம்பரம் பார்த்தால் வருமானம் வரும் என கூறினர். 18 ஆயிரம் ரூபாய் கட்டி 6 நபர்களை சேர்த்து விட்டால் மாதம் 12 ஆயிரம் ரூபாய் வருமானம் வரும் எனவும், இல்லையெனில் 1 இலட்சத்து 26 ஆயிரம் ரூபாய் செலுத்தி உறுப்பினரானால் மாதம்தோறும் வருமானம் வரும் என கூறினர். இதனை நம்பி பலர் முதலீடு செய்தனர். இரண்டு ஆண்டுகள் முறையாக பணம் அளித்து வந்த அந்த நிறுவனம், திடீரென ஒரேநாளில் மூடப்பட்டது. அந்த நிறுவனத்தில் மார்கெட்டிங் டைரக்டராக இருந்த சக்தி ஆனந்த் என்பவரை வைத்து தற்போது மைவி3 ஏட்ஸ் என்ற பெயரில் நிறுவனம் துவங்கி வசூல் வேட்டை நடத்தி வருகின்றனர். சக்தி ஆனந்த் ஒரு பினாமி. இந்த நிறுவனத்தையும் விரைவில் மூடும் திட்டம் அவர்களுக்கு உள்ளது. இவர்கள் மீது பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இவர்கள் மீது மேலும் பலர் புகார் அளிப்பார்கள்” எனத் தெரிவித்தார்.


கோவையை தலைமையிடமாக கொண்டு Myv3 Ads என்ற செயலியை சக்தி ஆனந்தன் என்பவர் நடத்தி வருகிறார். மேலும் யூ டியூப் சமூக வலைதளத்தில் இந்த செயலியின் சேனலும் இயங்கி வருகிறது. இதில் தினமும் 2 மணி நேரம் விளம்பரம் பார்ப்பதன் மூலமும், புதிய நபர்களை சேர்ப்பதன் மூலமும் அதிக வருமானம் பார்க்கலாம் என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. அதில் 360 ரூபாய் முதல் ஒரு இலட்சத்து 21 ஆயிரம் ரூபாய் வரை உள்ள பல்வேறு பிரிவுகளில் பணம் செலுத்தி உறுப்பினராக சேர முடியும் எனவும், தினசரி மொபைல் போனில் விளம்பரம் பார்ப்பதன் மூலம் 5 ரூபாய் முதல் 1800 ரூபாய் வரை சம்பாதிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செலுத்தும் பணத்திற்கு ஏற்ப ஆயுர்வேத கேப்சூல்கள் வழங்கப்படும் எனவும், புதிய நபர்களை சேர்க்கும் நபர்களுக்கு தனியாக பணம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நம்பி ஆயிரக்கணக்கானோர் இலட்சக்கணக்கில் முதலீடு செய்துள்ளனர். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உட்பட நாடு முழுவதும் லட்சகணக்கானோர் இதில் உறுப்பினர்களாக இருக்கின்றனர். இந்நிலையில் மருத்துவர்களின் பரிந்துரையின்றி மாத்திரைகளை வழங்குவது சட்டத்திற்கு புறம்பானது எனவும், தினசரி விளம்பரம் பார்ப்பதால் அதிக வருமானம் பார்க்கலாம் என ஆசைக்காட்டி பொதுமக்களை ஏமாற்றி பெரும் தொகையை வசூலித்து வருவதாக கோவை மாநகர சைபர் க்ரைம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement