கோவை புறநகர்ப் பகுதிகளான துடியலூர், வடமதுரை, தடாகம் சாலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை திடீரென வீசிய சூறாவளிக் காற்று மற்றும் பலத்த மழையால் பல இடங்களில் சேதங்கள் ஏற்பட்டன. கடைகளின் மேற்கூரைகள் காற்றில் பறந்ததுடன், மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

Continues below advertisement

கோடைக் காலம் நிறைவடைந்து தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்பட்டு வரும் நிலையில், கோவையின் பல்வேறு பகுதிகளில் நேற்று பிற்பகலுக்குப் பிறகு வானிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. மாலை நேரத்தில் கருமேகங்கள் சூழ்ந்த நிலையில், பலத்த காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது.

குறிப்பாக துடியலூர், வடமதுரை மற்றும் தடாகம் சாலைப் பகுதிகளில் சூறாவளிக் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சாலையோரத்தில் அமைந்திருந்த வணிக வளாகங்கள் மற்றும் தற்காலிகக் கடைகளின் தகர மற்றும் ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரைகள் பெயர்ந்து காற்றில் தூக்கி வீசப்பட்டன.

Continues below advertisement

திடீரென மேற்கூரைகள் பறந்ததால் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அதிர்ச்சியடைந்து பாதுகாப்பான இடங்களுக்கு விரைந்து சென்றனர். சில இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்ததுடன், தடாகம் சாலை பகுதியில் மின் கம்பங்களும் சாய்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் காரணமாக சில பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடங்களுக்கு விரைந்த மின்வாரிய ஊழியர்கள் போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு மின் விநியோகத்தை மீட்டெடுத்தனர்.

நேற்று மாலை வீசிய திடீர் சூறாவளிக் காற்று மற்றும் கனமழையால் கோவையின் வடக்கு புறநகர்ப் பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு அல்லது பெரிய அளவிலான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.