சார்ஜாவில் இருந்து கோவைக்கு கடத்தி வரப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள 1399 கிராம் தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


கோவை பீளமேடு பகுதியில் கோவை பன்னாட்டு விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த விமான நிலையத்தில் இருந்து தினமும் சென்னை, டெல்லி உள்ளிட்ட பகுதிகளுக்கு உள் நாட்டு விமானங்களும், சார்ஜா, கொழும்பு, சிங்கப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வெளி நாட்டு விமானங்களும் இயக்கப்பட்டு வருகின்றன. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் விமானம் மூலம் பயணித்து வருகின்றனர். விமான நிலையத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காகவும்,  தங்கம், போதைப் பொருட்கள் உள்ளிட்டவை கடத்தப்படுவதை தடுக்கவும் பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தப்படுவது வழக்கம். அதேபோல பயணிகளின் உடமைகளும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. இதில் அவ்வப்போது பயணிகளிடம் கடத்தல் தங்கம், துப்பாக்கிகள், தோட்டாக்கள், போதைப் பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. பல்வேறு நூதன முறைகளில் தங்கம் கடத்தி வரப்படுவதும், அதிகாரிகளின் சோதனையில் பிடிபடுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.


தங்கக் கட்டிகள் பறிமுதல்


இந்த நிலையில் சார்ஜாவில் இருந்து இன்று காலை ஏர் அரேபியா விமானம் கோவை விமான நிலையத்திற்கு வந்தது. இந்த விமானத்தில்  தங்கக் கட்டிகள் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் அந்த விமானத்தில் வந்த பயணிகளையும், பயணிகளின் உடைமைகளையும் சோதனையிட்டனர். பின்னர் விமானத்தின் உட்பகுதியிலும் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது விமான இருக்கை ஒன்றின் பக்கவாட்டில் இருக்கும் உட்பக்க பேனலில் மூன்று பாக்கெட்டுகளில் தங்கக் கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. இதனையடுத்து மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்க கட்டிகளை பரிசோதித்த போது, 1399 கிராம் எடையில் தங்க கட்டிகள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைப்பற்றப்பட்ட தங்க கட்டிகளின் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய் இருக்கும் என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தங்கக்கட்டிகளை கடத்தி வந்த நபர் யார் என்பது குறித்தும் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.