கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் ; வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து பீளமேடு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Continues below advertisement

கோவை பீளமேடு பகுதியில் கோவை பன்னாட்டு விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த விமான நிலையத்தில் இருந்து தினமும் சென்னை, டெல்லி உள்ளிட்ட பகுதிகளுக்கு உள் நாட்டு விமானங்களும், சர்ஷா, கொழும்பு, சிங்கப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வெளி நாட்டு விமானங்களும் இயக்கப்பட்டு வருகின்றன. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் விமானம் மூலம் பயணித்து வருகின்றனர். விமான நிலையத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காகவும்,  தங்கம், போதைப் பொருட்கள் உள்ளிட்டவை கடத்தப்படுவதை தடுக்கவும் பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தப்படுவது வழக்கம். அதேபோல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் அதிகளவில் வந்து செல்வதால் மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Continues below advertisement

வெடிகுண்டு மிரட்டல்

இந்நிலையில் கோவை விமான நிலைய அதிகாரிகளுக்கு இமெயில் ஒன்று வந்துள்ளது. அதில் விமான நிலையத்தில் உள்ள கழிவறையில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது வெடிக்கப் போவதாகும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் இஸ்லாமிய அமைப்பு பெயரில் இந்த இமெயில் வந்திருந்ததால், உடனடியாக வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து கோவை மாநகர காவல் துறை வெடிகுண்டு கண்டறியும் போலீசார் கோவை விமான நிலையம் முழுவதும் தீவிர சோதனை ஈடுபட்டனர். மோப்ப நாய்கள் கொண்டு விமான நிலையம் முழுவதும் சோதனை மேற்கொண்டதில் வெடிகுண்டு ஏதும் கைப்பற்றப்படவில்லை. இதனால் வெடிகுண்டு மிரட்டல் என்பது புரளி என்பது தெரியவந்தது. எனினும் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

காவல் துறை விசாரணை

இது குறித்து காவல் துறையினர் தரப்பில் கூறுகையில், கடந்த வாரம் இதே போன்று விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அது வெறும் புரளி என தெரியவந்தது. அது போல மீண்டும் இஸ்லாமிய அமைப்பின் பெயரில் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மோப்பநாய் உதவியுடன் விமான நிலைய அனைத்து பகுதிகளிலும் சோதனை மேற்கொண்டதில், இது மீண்டும் வெடிகுண்டு புரளி என தெரிய வந்தது எனினும் பாதுகாப்புக்காக காவல் துறையினர் பணியில் உள்ளதாக தெரிவித்தனர். கடந்த இரண்டு வாரங்களில் இரண்டு முறை கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ள நிலையில், இதே போன்று பல்வேறு விமான நிலையங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது. கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து பீளமேடு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola