கோவை பந்தயச் சாலை பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நீதித்துறை விருந்தினர் மாளிகையை மெட்ராஸ் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வரநாத் பந்தாரி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர்  பங்கேற்றனர். முன்னதாக பேசிய தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ”பாரம்பரியமான வழக்கறிஞர் குடும்பத்தில் பிறந்த தான் சட்டம் படிக்கவில்லை என்றாலும், சட்டம் மற்றும் நீதித்துறையை தொடர்ந்து பின்பற்றி வருகிறேன். கடந்த சில ஆண்டுகளில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. அதற்கு நிகராக நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. 


ஜனநாயகத்தை காக்கும் கடைசி பொறுப்பு நீதிமன்றத்துக்கு தான் உள்ள நிலையில், நீதித்துறைக்கு போதிய நிதி ஆதாரங்கள் ஒதுக்கப்படுவதில்லை. தமிழக  பட்ஜெட்டிலும் நீதித்துறைக்கான ஒதுக்கீடு போதுமானதாக இல்லை. அதிகமான வழக்குகளை கையாளும் மாவட்ட நீதிமன்றங்கள் உள்ளிட்ட கீழமை நீதிமன்றங்களை வலுப்படுத்துவது அவசியமாக உள்ளது. முதல்வரும், நான் பொறுப்பு வகிக்கும் நிதித் துறையும், நீதித் துறை கட்டமைப்புகளில் அதிக முதலீடு செய்வதை எதிர்பார்க்கிறோம்” எனத் தெரிவித்தார்.


இதையடுத்து பேசிய உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பந்தாரி, “உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த போது, தமிழக நிதியமைச்சரை சென்னை விமான நிலையத்தில் சந்தித்த போது நீதித்துறைக்கு என்ன தேவைப்படுகிறது எனக் கேட்டறிந்ததார். தற்போது  தமிழக அரசு நீதித் துறைக்கு 1,400 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதை எப்படி சமாளிப்பீர்கள் என கேட்ட போது, நான் வங்கியில் வேலை செய்தவன் எனக்கு கணக்கு நிர்வாகம் தெரியும் என்று நிதியமைச்சர் கூறினார். தமிழக முதல்வரின் முன்னெடுப்பில் நீதித்துறை கட்டுமானங்கள் வேகமெடுத்து வருகின்றன. 




மெட்ராஸ் உயர்நீதிமன்றத்திற்கு ஏழு ஏக்கரில் 500 கோடி மதிப்பிலான நிலம் புதிய நீதிமன்ற கட்டிடம் கட்டுவதற்கு வழங்கப்பட்டுள்ளது. நகருக்கு நடுவே இவ்வளவு மதிப்புள்ள நிலத்தை வழங்க பல அரசுகள் தயக்கம் காட்டி வந்த சூழலில், பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த விவகாரத்தை முதல்வர் தீர்த்து வைத்தார். 500 கோடி மதிப்புள்ள 7 ஏக்கர் நிலம் தலைமை செயலாளரின் உதவியுடன் விரைவில் ஒதுக்கப்பட்டது. புதிய நீதிமன்ற கட்டிடம் கட்டுவதற்கு 350 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மெட்ராஸ் உயர்நீதிமன்றம் தான் அதிக வழக்குகளை தீர்த்து வைத்துள்ளது. மெட்ராஸ் உயர்நீதிமன்றம் வழக்குகளை முடித்து வைக்கும் சதவிகிதம் 109% ஆக உள்ளது.  ஒரு மாதத்தில் 100 வழக்குகள் தாக்கல் ஆகிற இடத்தில் 109 வழக்குகள் முடித்து வைக்கப்படுகின்றன. தாக்கல் செய்யப்படும் வழக்குகளை விட முடித்து வைக்கப்படும் வழக்குகள் அதிகமாக உள்ளது. 


தமிழக அரசிடம் 116 நீதிமன்ற அறைகள் வேண்டும் என கேட்டிருந்தோம். ஆனால் 150 நீதிமன்ற அறைகள் கட்டுவதற்கு விரைவாக நிதி ஒதுக்கப்பட்டது. நீதித்துறைக்கு தேவையான நீதிபதிகளில் மூன்றில் ஒரு பங்கு  நீதிபதிகள் பணியிடங்களே இருக்கும் நிலையிலும், வழக்குகளை விரைந்து முடித்து வருகிறோம். சென்னையில் நடைபெற்ற தலைமை நீதிபதிகள் மாநாட்டில் சென்னை உயர்நீதிமன்றம் நாட்டிலேயே முன்னணியில் உள்ளதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாராட்டினார். தமிழக அரசின் உதவியில்லாமல் இது சாத்தியமாகி இருக்காது” எனத் தெரிவித்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண