கோவை அவினாசி சாலையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி வளாகம் பி.ஆர்.எஸ் வளாகம் என அழைக்கப்படுகிறது. இங்கு, காவலர் பயிற்சி பள்ளி, கவாத்து மைதானம், குதிரையேற்ற பயிற்சி மைதானம், காவலர்களுக்கான குடியிருப்புகள் ஆகியவை அமைந்துள்ளன. முக்கியமான சில வழக்குகளில் குற்றவாளிகளை காவலில் எடுத்து காவல் துறையினர், பாதுகாப்பிற்காக இங்குள்ள அலுவலகங்களில் வைத்து விசாரணை நடத்துவது வழக்கம். அந்த வகையில் தற்போது கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமும் இங்கு விசாரணை நடைபெற்று வருகிறது. கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜ், தனபாலின் ஓட்டுனர் காவகுமார் ஆகியோரிடம் இவ்வளாகத்தில் வைத்து விசாரணை நடைபெற்றிருந்தது. நேற்றைய தினம் கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் நீலகிரி மாவட்ட தனிப்படை காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.


மேலும் படிக்க : கோடநாடு கொலை வழக்கு - எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் இரண்டாவது முறையாக விசாரணை


இந்த வளாகத்தில் அமைந்துள்ள குடியிருப்பில் காவலர் விமல்ராஜ் என்பவர் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு சுமார் 11 மணியளவில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்த மர்ம நபர் ஒருவர், விமல்ராஜ் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், முடிந்தால் தன்னை கைது செய்யுமாறும் கூறி விட்டு இணைப்பை துண்டித்துள்ளார். இது குறித்து விமல்ராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து மோப்ப நாய் பிரிவு காவலர்கள், வெடிகுண்டு நிபுணர்களும் மைதான வளாகத்தில் சோதனை நடத்தினர். ஆனால் வெடிகுண்டுகள் எதுவும் கிடைக்காததால், இது வெறும் புரளி என்பது தெரியவந்தது.


இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தியதில், போன் செய்து மிராட்டல் விடுத்தவர் புலியகுளம் பகுதியைச் சேர்ந்த மோகனகாந்தி என்பது தெரியவந்தது. விமல்ராஜின் உறவினரான மோகனகாந்தி, அவர் மீதான குடும்ப முன் விரோதம் காரணமாக மது போதையில் இவ்வாறு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதையடுத்து அவரைப் பிடித்து பந்தய சாலை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோடநாடு எஸ்டேட் மேலாளரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்திய நிலையில், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண