கேரளா மாநிலத்தில் மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட ஆழப்புழா மாவட்டத்திற்கு கோவையில் இருந்து சுமார் 6 லட்ச ரூபாய் மதிப்புடைய நிவாரணப் பொருட்கள் கோவை மாவட்ட பாஜக சார்பில் அனுப்பப்பட்டது. நிவாரணப் பொருட்கள் ஏற்றிச் செல்லும் வாகனத்தை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கொடியசைத்து அனுப்பி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அண்ணாமலை பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”அதிமுகவில் இ.பி.எஸ், ஓ.பி.எஸ் ஆகியோருடன் நாங்கள் கூட்டணியில் இருக்கிறோம். அவர்களின் கட்சி உள் விவகாரங்கள் குறித்து இந்த நேரத்தில் நான் கருத்து சொன்னால் அது தவறாக இருக்கும். யார் வேண்டுமானலும் அரசியலுக்கு வரலாம். சசிகலா வருகை குறித்த விவகாரத்தை அந்த கட்சிக்குள் தான் பேசிக் கொள்கின்றனர். அதில் உள்ளே புகுந்து நான் கருத்து சொல்வது சரியாக இருக்காது” என அவர் தெரிவித்தார்.


நமது அம்மா நாளிதழ் அண்ணாமலையை பாராட்டி எழுதி இருப்பது குறித்த கேள்விக்கு, ”யார் திட்டினாலும், பாராட்டினலும் ஆதாரங்களோடு திட்டுங்கள், பாராட்டுங்கள்” என பதிலளித்தார். தொடர்ந்து பேசிய அவர், “ திமுகவை பா.ஜ.வும் சரி, அதிமுகவும் சரி  விமர்சனம் செய்கிறது. அதிமுகவில் இருந்து இபிஎஸ் கூட சமீபத்தில் திமுகவை கண்டித்து அறிக்கை கொடுத்து உள்ளார். பாஜக ஆக்கப்பூர்வமான எதிர் கட்சியாக செயல்படுகிறது. எந்த குழப்பமும் இல்லாமல் மக்கள் பிரச்சினையை அரசிடம் கொண்டு சொல்கிறோம். சில இடங்களில் நாங்கள் சொல்வதை தமிழக முதல்வரும் செவி சாய்த்து கேட்டுக் கொள்கின்றார். எடுத்துக்காட்டாக கோவில்களை திறப்பது, ஆவின் டெண்டர் போன்றவற்றை தமிழக முதல்வர் ஏற்றுக் கொண்டுள்ளார். 


தமிழகத்தில் திமுக பேசுவது எல்லாம் பா.ஜ.கவை எதிர்த்து தான். அப்படி இருக்கும் போது திமுக பா.ஜ.க இடையே தான் கருத்தியல் ரீதியான அரசியல் நடைபெறுகிறது. அதிமுக தமிழகத்தில் இருந்து கருத்துகளை முன் வைக்கின்றனர். இந்தியா சார்பில் இருந்து பா.ஜ.க  கருத்துகளை தெரிவிக்கின்றது. கருத்தியல் அரசியல் பா.ஜ.க, திமுக இடையே தான் நடக்கின்றது. யார் எதிர்கட்சி என்பதில் அதிமுக, பா.ஜ.க இடையே போட்டி இல்லை. ஒன்றாக இருக்கின்றோம்,


அரசியலுக்கு  யார் வேண்டுமானாலும் வரலாம், போகலாம். அது மக்கள் ஏற்றுக் கொள்வதை பொறுத்து என்பதால் விடையை மக்களிடமே விட்டுவிடலாம். தமிழ்நாடு மின் வாரியத்தில் PPAவில்  ஊழல் நடக்க போகின்றது. அதை சுட்டி காட்டிகின்றோம். அமைச்சர் முதலில் அவர் வீட்டை சுத்தம் செய்து விட்டு கேட்கட்டும், பதில் சொல்கின்றேன். அமைச்சர் செந்தில் பாலாஜி வாயில் இருந்தே ஆதாரம் வரும். திமுக பா.ஜ.க இடையே  கருத்து மோதல்கள் நடைபெறவில்லை கொடுத்த ஆதாரங்களுக்கே இதுவரை பதில் வரவில்லை. ஆதாரம் கொடுக்காமல் யாரும் பேசவில்லை. முதல்வர்  மின் துறை மீதும் முதல்வர் நடவடிக்கை எடுப்பார்” என அவர் தெரிவித்தார்.