தென்கயிலாயம் என்று அழைக்கப்படும் கோவை வெள்ளியங்கிரி மலைக்கு இன்று முதல் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அதிரடி முடிவை மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ளது.

Continues below advertisement

பருவமழை

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தற்போது பருவமழை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக வெள்ளியங்கிரி மலைப்பாதைகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வனத்துறையும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து மலையேற்றத்திற்கான தடையை அறிவித்துள்ளன.

 தடைக்கான காரணம்:

தொடர் மழையினால் செங்குத்தான மலைப்பாதைகள் வழுக்கும் தன்மையுடன் காணப்படுகின்றன. மேலும் ஏழாவது மலையில் வீசும் அதீத குளிர்காற்று மற்றும் மலை ஓடைகளில் ஏற்படக்கூடிய திடீர் நீர்வரத்து பக்தர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடும். நிலச்சரிவு அபாயம் மற்றும் வனவிலங்குகளின் நடமாட்டம் மழைக்காலங்களில் அதிகமாக இருக்கும் என்பதால் இந்த பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Continues below advertisement

 இன்று முதல் அமல் - வனத்துறை எச்சரிக்கை!

இது தொடர்பாக கோவை மாவட்ட வனத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகம் பூண்டி வெள்ளியங்கிரி மலைக்கு ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் இறுதிவரை பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் கோவையில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.மேற்கு தொடர்ச்சி மலையில் இனிவரும் காலங்களிலும் அதிகளவில் மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே இன்று முதல் வெள்ளியங்கிரி மலையேறி செல்ல பக்தர்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதற்கு பக்தர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அத்துடன் இந்த அறிவிப்பை மீறி யாரும் மலையேற முயற்சிக்க வேண்டாம் என வனத்துறை அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

அடிவாரத்தில் தரிசனம் செய்யலாம்!

வானிலை சீரடைந்த பிறகு வனத்துறையினர் ஆய்வு செய்து உரிய அறிவிப்பை வெளியிடுவார்கள். அதுவரை பக்தர்கள் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சுயம்பு லிங்கத்தை மட்டும் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை கவனிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.