கோவையில் கருவுற்ற பூனைகளுக்கு உரிமையாளர் சீர் சடங்குகளுடன் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்திய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


நாய், பூனை உள்ளிட்ட செல்லப் பிராணிகளை, பெற்ற பிள்ளைகள்போல நேசித்து பல குடும்பத்தினர் கவனித்து வருகின்றனர். செல்லப் பிராணிகள் மீதுள்ள அளவு கடந்த பாசத்தை வெளிப்படுத்தும் வகையில் பலர்  நடந்துகொள்வது வழக்கம். அந்த வகையில் தங்களது வீட்டு பெண்ணாக கருதி சிலர் கருவுற்று இருக்கும் பூனை, நாய் போன்ற செல்லப் பிராணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் கோவையில் ஒரே சமயத்தில் கருவுற்ற இரண்டு பூனைகளுக்கு உரிமையாளர் சீர் சடங்களுடன் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தியுள்ளார்.




கோவை வேலாண்டிபாளையத்தை சேர்ந்தவர்கள் உமா மகேஸ்வரன் - சுபா தம்பதியினர். இவர்கள் தங்களது வீட்டில் ஒரு ஆண் மற்றும் 2 ப்ரிஸியன் இன பூனைகளை செல்லமாக வளர்த்து வருகின்றனர். இதில் ஜீரா மற்றும் ஐரிஸ் என பெயரிடப்பட்ட இரண்டு பெண் பூனைகள் ஒரே சமயத்தில் கருவுற்றன‌. இதனால் மகிழ்ச்சியடைந்த உமா மகேஸ்வரன் குடும்பத்தினர் செல்லப் பூனைகளுக்கு வளைகாப்பு செய்ய முடிவு செய்தனர். இதையடுத்து ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று பூனைகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தி வைக்கப்பட்டது.   




வளைகாப்பு நிகழ்ச்சியின்போது பூனைகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு புத்தாடை உடுத்தப்பட்டது. சீர் வரிசையாக தேன் மிட்டாய், கடலை மிட்டாய், பழங்கள், பிஸ்கட்டுகள், சாக்லேட்டுகள் செல்லப் பிராணிகளுக்காக வைத்து சடங்குகள் செய்யப்பட்டன. இதையடுத்து ஒவ்வொருவராக பூனைகளின் நெற்றியில் பொட்டு வைத்தனர். இதனைத் தொடர்ந்து சீர் வரிசை தின்பண்டங்களை பூனைகளுக்கு விருந்தாக அளிக்கப்பட்டது. இந்த வளைகாப்பு நிகழ்வில் உமா மகேஸ்வரனின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கால்நடை மருத்துவமனை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.




இது குறித்து பூனைகளின் உரிமையாளர் உமா மகேஸ்வரனின் மகள் ஸ்மித்தி கூறுகையில், ”கருவுற்ற இரண்டு பூனைகளையும் தங்களது குடும்பத்தில் ஒரு உறுப்பினர் போல கவனித்து வருகிறோம். பூனைகளை மகிழ்விக்கும் விதமாக இந்த வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கருவுற்று இருக்கும் இரண்டு பூனைகளுக்கும் சத்து மிகுந்த இறைச்சி மற்றும் உணவு வகைகளை உணவாக வழங்கி கவனித்து வருகிறோம்” என அவர் தெரிவித்தார். கருவுற்ற பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி செய்வது போல, பூனைகளுக்கு சீர் சடங்குகளுடன் வளைகாப்பு நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண