குட்டி யானையை கூட்டத்துடன் சேர்க்கும் முயற்சி தோல்வி : யானைகள் முகாமிற்கு அனுப்பிவைப்பு

மற்ற யானைக் கூட்டத்துடன் அந்த குட்டி யானையை சேர்த்து வைக்க முயற்சி செய்தனர். ஆனால் அந்த முயற்சிகள் பயனளிக்காமல் தோல்வியில் முடிவடைந்தன.

Continues below advertisement

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதையொட்டிய அடர்ந்த வனப்பகுதியில் காட்டு யானைகள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. அடர்ந்த வனப்பகுதியில் உள்ள காட்டு யானைகள் இரவு நேரத்தில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி கிராமப்பகுதிகளுக்குள் நுழைவது வழக்கம். வனப்பகுதியையொட்டி உள்ள விவசாய தோட்டங்களில் புகுந்து யானைகள் வாழை உள்ளிட்ட பயிர்களை சாப்பிட்டு வருகிறது. இவ்வாறு கிராமப் பகுதிகளுக்குள் வரும் யானைகளை வனத்துறையினர் மீண்டும் வனப்பகுதிகளுக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

Continues below advertisement

கூட்டத்தை பிரிந்து தவித்த குட்டி யானை

இந்த நிலையில் கடந்த 6 ம் தேதி கோவை மாவட்டம் பெரியநாய்க்கன்பாளையம் அருகே உள்ள கோவனூர் கிராமத்தில் காப்புக்காடு எல்லைக்கு வெளியே உள்ள கேஸ் குடோன் அருகே சுமார் 4 மாத வயதுடைய ஆண் யானைக் குட்டி ஒன்று கூட்டத்தை பிரிந்து தனியாக சுற்றி வந்துள்ளது. இதனைப் பார்த்த கிராம மக்கள் குட்டி யானை தனியாக சுற்றி வருவதாக வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதன் பேரில் விரைந்து வந்த பெரியநாய்க்கன்பாளையம் வனத்துறையினர் குட்டி யானையை பாதுகாப்பாக மீட்டனர். இது குறித்து வனத்துறை ஊழியர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அவர்களின் ஆலோசனையின் பேரில், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து சிறப்பு யானைகள் கண்காணிப்பு குழு குட்டி யானையை யானை கூட்டத்துடன் சேர்த்து வைக்க உதவுவதற்காக வரவழைக்கப்பட்டது. இதனிடையே கோயம்புத்தூர் வன கால்நடை மருத்துவ அலுவலர் மேற்பார்வையில் யானைக் குட்டிக்கு இளநீர், குளுக்கோஸ் உள்ளிட்டவை கொடுக்கப்பட்டது. பின்னர் குட்டி யானையை பரிசோதித்த போது, நல்ல உடல் நலத்துடன் இருப்பது தெரியவந்தது.


தெப்பக்காடு முகாமிற்கு அனுப்பிவைப்பு

இதையடுத்து குட்டி யானை பிரிந்த வந்த யானைக் கூட்டத்தின் இருப்பிடத்தை கண்டறிய 3 குழுக்கள் அமைக்கப்பட்டு, தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இதில் 4 பெண் யானைகள், ஒரு இளவயது ஆண் யானை கொண்ட ஒரு யானைக் கூட்டம் புளியம்தோப்பு பகுதியில் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து குட்டி காட்டு யானையின் மீது மனித வாடை வராமல் இருக்க குளிக்க வைத்து, குட்டி யானையை வனப்பகுதிக்குள் அழைத்து சென்று காட்டு யானை கூட்டத்துடன் வனத்துறையினர் சேர்க்க முயற்சி மேற்கொண்டனர். 12 மணி நேர போராட்டத்திற்கு பிறகு குட்டி யானையை அந்த யானைக் கூட்டத்துடன் வனத்துறையினர் சேர்த்து வைத்தனர்.

தொடர்ந்து குட்டி யானையை வனத்துறையினர் கண்காணிக்கும் பணிகளில் ஈடுபட்டனர். அப்போது சிறிது நேரத்தில் அந்த குட்டி யானை கூட்டத்தை விட்டு பிரிந்து வந்தது தெரியவந்தது. பின்னர் மற்ற யானைக் கூட்டத்துடன் அந்த குட்டி யானையை சேர்த்து வைக்க முயற்சி செய்தனர். ஆனால் அந்த முயற்சிகள் பயனளிக்காமல் தோல்வியில் முடிவடைந்தன. இதனால் அந்த குட்டி யானையை பராமரிக்க முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு கொண்டு செல்ல வனத்துறையினர் முடிவு செய்தனர். அதன்படி லாரி மூலம் குட்டி யானை தெப்பக்காடு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அந்த குட்டி யானை பராமரிக்கப்பட்டு வருகிறது.

Continues below advertisement
Sponsored Links by Taboola