தமிழ்நாட்டில் இருந்து கேரள மாநிலத்திற்கு கோவை வழியாக நாள்தோறும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் இருந்து கேரள மாநிலம் வாளையார் வரை வனப்பகுதி வழியாக இரண்டு இரயில் பாதைகள் செல்கின்றன. இதில் முதல் இரயில் பாதை 17 கி.மீ. தொலைவும், இரண்டாவது இரயில் பாதை 23 கி.மீ. தொலைவும் கொண்டது. இப்பகுதியில் உள்ள இரயில் தண்டவாளத்தை கடக்கும் காட்டு யானைகள் ரயில் மோதி உயிரிழப்பது தொடர்ந்து வருகிறது. இதேபோல கேரள மாநிலத்திற்குள் வாளையார் முதல் பாலக்காடு வரையிலான இரயில் பாதையிலும் அவ்வப்போது இரயில் மோதி காட்டு யானைகள் உயிரிழப்பது நடந்து வருகிறது. குறிப்பாக கடந்த 15 ஆண்டுகளில் 6 முறை யானைகள் ரயில் விபத்துகளில் சிக்கியுள்ளன. இந்த விபத்துகளில் மொத்தம் 11 காட்டு யானைகள் உயிரிழந்து உள்ளன.

இதனால் காட்டு யானைகள் இரயில் விபத்துகளில் உயிரிழப்பதை தடுக்க இரயில்வே நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும், இரயில் மோதி யானைகள் உயிரிழப்பது தொடர்ந்து வருகிறது. வனப்பகுதிகளை ஒட்டியுள்ள இரயில் பாதையில் வேகமாக இரயிலை ஒட்டக்கூடாது என அறிவுறுத்தப்பட்டு இருந்தாலும், இரவு நேரங்களில் இரயில்களை வேகமாக இயக்கி வருவதால் இந்த விபத்துகள் தொடர்ந்து வருகிறது. இதனைத் தடுக்க வனத்துறையினர் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக யானை வழித்தடத்தில் உள்ள தண்டவாளத்தில் இரயில் மோதி யானைகள் உயிரிழப்பதை தடுக்கும் வகையில், யானைகள் அடிக்கடி ரயில் பாதையை கடக்கும் இடங்களில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்தது. இதனைத்தொடர்ந்து இரயில்வே நிர்வாகம் 7.49 கோடி ரூபாய் ஒதுக்கி சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளைச் செய்தது. அதன்படி இரண்டாவது பாதையில் மதுக்கரை - எட்டிமடை ரயில் நிலையங்களுக்கு இடையே 8 மீட்டர் உயரமும், 18.3 மீட்டர் அகலமும் கொண்ட சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. இந்தப் பணிகள் முடிந்து சில மாதங்களுக்கு முன்பு பாலம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இதனைத்தொடர்ந்து யானைகள் ரயில் தண்டவாளத்திற்கு செல்லாமல் சுரங்கப்பாதை வழியாக ரயில் தண்டவாளத்தை கடந்து செல்ல துவங்கின. இதனைத்தொடர்ந்து மேலும் ஒரு சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளை செய்ய வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் யானைகளின் நடமாட்டத்தை கண்டறியும் வகையில் வனத்துறை மற்றும் ரயில்வே துறை சார்பில் ரயில் பாதைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் யானைகள் நடமாட்டத்தைக் கண்காணிக்க ‘ஆர்டிபிசியல் இண்டலிஜன்ஸ் சர்வலைன்ஸ்’ (ஏ.ஐ.எஸ்) எனும் செயற்கை நுண்ணறிவு கண்காணிப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ரயில் வழித்தடங்களில் 12 இ-சர்வைலன்ஸ் கோபுரங்கள் அமைக்கப்பட்டன. அவற்றில் மொத்தம் 24 செயற்கை நுண்ணறிவு தெர்மல் இமேஜிங் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கேமராக்கள் ரயில் தண்டவாள பகுதியில் யானைகளின் நடமாட்டத்தை படம் பிடித்து கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பும். அதன் அடிப்படையில் வனத்துறையினர் ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் அளிப்பார்கள். யானை நடமாட்டம் குறித்து ரயில் என்ஜின் டிரைவர்களுக்கு தகவல் அளித்து ரயிலின் வேகத்தை குறைக்க செய்வதால் யானைகள் உயிரிழப்பு தடுக்க முடியும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.