உழைப்பை இரட்டிப்பாக்குவேன்:


தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. கோவையில் போட்டியிட்ட தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தோல்வி அடைந்தார்.  இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாஜக வேட்பாளர் அண்ணாமலை, ”கோவை பாராளுமன்றத் தொகுதி வேட்பாளராகப் போட்டியிட்ட எனக்கு, 4.50 லட்ச வாக்குகள் அளித்து, அன்பையும் ஆதரவையும் அள்ளித் தந்திருக்கும் கோவை பாராளுமன்றத் தொகுதி பொதுமக்கள் அனைவருக்கும் தலைவணங்கி நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கோவையின் புதிய பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராஜ்குமாருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறேன்.


கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட மாற்று கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கோவை தொகுதி வளர்ச்சிக்கு, அவர் மேற்கொள்ளும் அனைத்து நலத்திட்டங்களுக்கும் முழுமையான ஆதரவை அளிப்பதோடு, தொடர்ந்து கோவை தொகுதி பொதுமக்கள் முன்னேற்றத்துக்கான என் உழைப்பை இரட்டிப்பாக்குவேன் என்று உறுதி அளிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.


கோவை மக்களவை தொகுதி 1952 ம் ஆண்டு முதல் இதுவரை 17 தேர்தல்களை சந்தித்துள்ளது. அதில் காங்கிரஸ் கட்சி 5 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 4 முறையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 3 முறையும், திமுக மற்றும் பாஜக தலா 2 முறையும், அதிமுக ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதியில் சூலூர், கவுண்டம்பாளையம், கோயம்புத்தூர் வடக்கு, கோயம்புத்தூர் தெற்கு, சிங்காநல்லூர் மற்றும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பல்லடம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.


கோவை மக்களவைத்  தொகுதி:


இதில் ஆண் வாக்காளர்கள் 10,41,349 பேர், பெண் வாக்காளர்கள் 10,64,394 பேர், மூன்றாம் பாலினத்தவர் 381 பேர் என மொத்தம் 21,06,124 வாக்காளர்கள் உள்ளனர். 26 சுயேட்சைகள் உட்பட மொத்தம் 37 வேட்பாளர்கள் கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டனர். அதில் திமுகவை சேர்ந்த கணபதி ராஜ்குமார், அதிமுகவை சேர்ந்த சிங்கை ராமச்சந்திரன், பாஜகவை சேர்ந்த அண்ணாமலை ஆகியோர் முக்கியமான வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.


வாக்குப்பதிவு விபரம்


கோயம்புத்தூர் பாராளுமன்ற தொகுதியில் 582 மையங்களில் 2059 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. கோவை மக்களவை தொகுதியில் மொத்தம் 64.42 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. கோவை வடக்கு தொகுதியில் 58.74 சதவீத வாக்குகளும், கோவை தெற்கு தொகுதியில் 59.25 சதவீத வாக்குகளும், சிங்காநல்லூர் தொகுதியில் 59.33 சதவீத வாக்குகளும், கவுண்டம்பாளையம் தொகுதியில் 66.42 சதவீத வாக்குகளும், பல்லடம் தொகுதியில் 67.42 சதவீத வாக்குகளும், சூலூர் தொகுதியில் 75.33 சதவீத வாக்குகளும் பதிவாகின. மொத்தம், 13 லட்சத்து, 66 ஆயிரத்து, 5978 வாக்காளர்கள் வாக்களித்தனர். இதேபோல 7,239 தபால் ஓட்டுகள் பெறப்பட்டன. வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.



அண்ணாமலை கருத்து


கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதல் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்தார். பாஜக மாநிலத் தலைவர் தொடர்ந்து பின்னடைவு சந்தித்து வந்தார். சில சுற்றுகளில் திமுகவை விட கூடுதலாக வாக்குகளை பெற்றாலும், அவரால் இறுதிவரை முன்னிலை பெற முடியவில்லை. இறுதியாக 24 சுற்றுகள் மற்றும் தபால் வாக்குகள் சேர்த்து கோவை மக்களவை தொகுதியில் 1 இலட்சத்து 18 ஆயிரத்து 68 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வெற்றி பெற்றார்.


திமுக 568200 வாக்குகளும், பாஜக 450132 வாக்குகளும், அதிமுக 236490 வாக்குகளும், நாதக 82657 வாக்குகளும் பெற்றனர். இதனால் 28 ஆண்டுகளுக்கு பிறகு திமுக கோவை தொகுதியில் நேரடியாக போட்டியிட்டு வென்றுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் கோவையில் உள்ள பத்து சட்டமன்ற தொகுதிகளிலும் வென்ற, அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.