கோவை நாடாளுமன்ற தொகுதியில் கடந்த தேர்தலில் பாஜகவிற்காக பணியாற்றிய பிப்பீஸ் பார் அண்ணாமலை என்ற அமைப்பு, வாய்ஸ் ஆப் கோவை என மாற்றப்பட்டுள்ளது. அந்த அமைப்பினருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கோவை குஜராத் சமாஜ் மண்டபத்தில் Modi 3.0 என்ற நிகழ்வு தன்னார்வலர்களுக்காக நடத்தப்பட்டது. இதில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது நாடாளுமன்ற தேர்தலில் பணி புரிந்த அந்த அமைப்பினருக்கும், பாஜக நிர்வாகிகளும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.


அண்ணாமலை பேட்டி


இதையடுத்து அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “பாஜக மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. தமிழகத்தின் வளர்ச்சி சார்ந்த திட்டங்கள் இருக்கும் என்பது எங்களது நம்பிக்கை. ஜிஎஸ்டி வருவதற்கு முன்பும் வரி விதிப்புகள் இருந்தன. வரும் காலத்தில் வரிகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மற்ற மாநில மின் கட்டணத்துடன் ஒப்பீடுவது முட்டாள்தனமான செயல். திமுக வாக்குறுதியான மாதத்திற்கு ஒருமுறை மின் கட்டணம் செலுத்துவதை நிறைவேற்றவில்லை. இரண்டு மாதங்களுக்கு சேர்த்து மின் கட்டணம் செலுத்துவதால் கட்டணம் அதிகமாகிறது. மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறையை திமுக தனது வாக்குறுதியை நிறைவேற்றினால் ஒவ்வொருவருக்கும் 6 ஆயிரம் ரூபாய் சேமிப்பு கிடைக்கும். மின் கட்டண உயர்வால் தொழில் வளர்ச்சிக்கு தேக்க நிலையை உருவாக்கியது. தமிழகத்தில் 15 முதல் 29 வயதுள்ள 19.5 சதவீதம் பேருக்கு வேலைவாய்ப்பு இல்லை. இதை திமுக ஒத்துக் கொள்ள வேண்டும். வேலைவாய்ப்பு இன்மை அதிகரித்துள்ளது. மற்ற மாநிலங்களை விட தமிழகத்திற்கு அந்நிய நேரடி முதலீடு குறைவாக வந்துள்ளது.




திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை


மத்திய அரசு மீது பழி போடுவதே முதல்வரின் இலக்கு. நீட் தேர்வு பாராளுமன்றத்தில் கேள்விகளுக்கு பதில் சொல்ல போகிறார்கள். நீட் தேர்வில் பேப்பர் லீக் நாடு முழுவதும் செல்லவில்லை. கைது நடவடிக்கை வேகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் டிஎன்பிஎஸ்சி கேள்வித் தாள்களும் லீக் ஆகியுள்ளது. இரயில்வே துறை அமைச்சரிடம் கோவை இரயில் நிலையம் விரிவாக்கம் செய்ய கோரிக்கை விடுத்துள்ளோம். தேர்தல் வாக்குறுதிகளை மத்திய அமைச்சரிடம் நாங்கள் கொடுத்து வருகிறோம். பெரிய திட்டங்கள் பட்ஜெட் வாயிலாக தான் வர வேண்டும். எங்களுக்கு இன்னும் 5 பட்ஜெட் உள்ளது. கோவை பாஜகவின் கட்டிடம் திறப்பு விழா உள்துறை அமைச்சர் அழைத்து வர இருக்கிறோம். அதற்கான முயற்சியில் இருக்கிறோம். ஒரு கட்சியில் எல்லாரும் நல்லவர்களாக எந்தக் கட்சியிலும் இருக்க முடியாது. யார் தவறு செய்தாலும் நீக்கம் செய்ய வேண்டும். நாங்களும் அதை செய்து வருகிறோம். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். நீதிமன்றம் மூலமாக தான் வர முடியும் நிலை தமிழ்நாட்டில் உள்ளது. இவ்விவகாரத்தில் முதல்வர் கேட்டால் உடனடியாக மத்திய அரசு கொடுக்க போகின்றது. தமிழ்நாட்டில் திமுகவிடம் இருந்து காப்பாற்றுவது தான் எங்கள் வேலை.


துணை முதலமைச்சர் பதவி


முதலமைச்சர் யாரை வேண்டுமானாலும் துணை முதலமைச்சராக நியமிக்கலாம். அதற்கு முதலமைச்சருக்கு அருகதை உள்ளது. இது திமுக எப்படிபட்ட கட்சி என்பதை மக்களுக்கு காட்டும். இதனால் திமுகவில் உள்ள சீனியர்கள் எல்லாம் போஸ்டர்கள் ஒட்டுவதற்கு மட்டும் தான் என்பது நிரூபணமாகிறது. ஆர். எஸ்.எஸ் இயக்கத்தில் யார் வேண்டுமானாலும் இருக்கலாம். மெம்பர்சிப் இல்லை. தமிழ்நாட்டில் மாற்றம் வேண்டும் என்றால் பிரச்சனை ஏற்படுத்தாதவர்களுடன் தான் கூட்டணி வைக்க முடியும். தி கிரைம் முன்னேற்ற கழகம் என்ற 18 பக்கங்கள் கொண்ட திமுகவில் உள்ள குற்றப்பின்னணி உள்ளவர்களின் பட்டியலை வெளியிடுகிறோம். பாஜக எல்லா கடவுளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும். ராமருக்கு செருப்பு மாலை போட்டவர்களின் இயக்கத்தில் இருந்து வந்த கட்சியின் பிரதிநிதியான அமைச்சர் ரகுபதி, சமூக நீதி, சம நீதி ராமர் ஆட்சியில் இருந்தது அதை நாங்கள் பின்பற்றுகிறோம், திராவிட மாடல் ஆட்சியின் முன்னோடி ராமர் என சொன்னது அவர்கள் மக்களிடம் மன்னிப்பு கேட்பதாக நான் நினைக்கிறேன். போனவாரம் காமராஜர் ஆட்சி, இந்தவாரம் ராமர் ஆட்சி என்கிறார்கள். காமராஜர் ஆட்சி என இப்போது உள்ள காங்கிரஸ் கட்சியினர் யாரும் சொந்தம் கொண்டாட வந்து விடாதீர்கள். காமராஜர் தமிழகத்தின் மிகப்பெரிய ஆளுமை” என்றார்.