கடந்த 1998ம் ஆண்டு கோவையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தவர்களுக்கு,  ஆண்டுதோறும் பாஜக உள்ளிட்ட இந்து அமைப்பினர் அஞ்சலில் செலுத்துவது வழக்கம். இன்று 25-ஆம் ஆண்டு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி, ஆர்.எஸ்.புரம் பகுதியில் நடைபெற்றது. இதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.


இதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ”பதிவுத்துறையில் பல நூறு கோடி கையூட்டு நடைபெற்றுள்ளது. நூற்றுக்கணக்கான அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் முதல்வருக்கும் அவர்களுக்கும் தொடர்பு உள்ளதா? பாஜக 15 நாள் டைம் தருகிறது. நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், ஒவ்வொரு சார் பதிவாளர் அலுவலகம் முன்பு போஸ்டர் அடித்து ஒட்டுவோம். கைது செய்யும் வரை உள்ளிருப்பு போராட்டம் நடத்துவோம்.


ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளளோம். மட்டன் கொடுக்கின்றனர். புடவை கொடுக்கின்றனர். திருமங்கலம், அரவக்குறிச்சி மாடலில் தேர்தல் வேலை நடைபெறுகிறது. கடிதம் எழுதி நடவடிக்கை எடுக்கக் கூறியுள்ளோம். ஏற்கனவே மாநில தேர்தல் ஆணையத்திற்கு திமுகவினர் பணம் கொடுப்பது தொடர்பான ஆடியோ கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.




தமிழக அரசுக்கு உள்ள ஒரே அக்கறை ஈரோடு ஜெயிக்க வைக்க வேண்டும் என்பதுதான். அனைத்து துறையும் செயல்படாமல் உள்ளது. சி.பி. ராதாகிருஷ்ணன் கவர்னர் ஆனதற்கு மகிழ்ச்சி. வரும் 17ஆம் தேதி பொறுப்பேற்கிறார். நாளை பிரிவு உபசார நிகழ்வு நடைபெறுகிறது. கோவை மக்களுக்கு நன்றி. கோவையில் துப்பாக்கி கலாச்சாரம் தலை தூக்கியுள்ளது. எஸ்.பி.ஆபீஸ் அருகே ஓட ஓட வெட்டி கொன்றுள்ளார். இதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். மந்திரி வேட்டி சேலைக்கு பணம் கொடுக்க சுற்றி வருகிறார். இவர்கள் மீது கோவை மக்கள் வருத்தத்தில் உள்ளனர். சட்டம் ஒழுங்கு தொடர்பாக உள்துறை அமைச்சரிடம் சொல்கிறோம். இப்படி ஆட்சி நடந்தால் சாமானிய மக்களுக்கு ஆபத்து. காவல் துறையை சுதந்திரமாக செய்ய விடுங்கள். தண்டனை உயர்த்துங்கள். மூடி மறைக்காதீர்கள். உண்மையை சொல்லி தண்டனை கொடுங்கள். காவல் துறையினர் பொய்யான செய்திகளை பத்திரிக்கைக்கு தருகின்றனர்.


பாஜக தேர்தல் பொதுக்கூட்டத்தை தயார் செய்து வருகின்றனர். அதில் அதிமுக தலைவர்கள் வருவார்கள். எங்களைப் பொறுத்தவரை இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஜெயிக்க வைக்க வேண்டும். பழ.நெடுமாறன் 2009ல் இருந்து தொடர்ந்து இது போன்று பேசுகிறார். அவர் இப்படி பேசுவது புதிதல்ல. இப்பிரச்சனையை பாஜக கடந்து வந்து விட்டோம். இலங்கையின் பல பகுதிகள் வளர்ச்சி திட்டங்களுக்காக மோடியை நம்பியுள்ளது. பல வளர்ச்சி திட்டங்களை இந்தியா செய்து கொண்டிருக்கிறது. 13 வது சட்ட திருத்ததை அமல்படுத்துவதற்கான நேரம் வந்து விட்டது. இன்னும் இரண்டு, மூன்று மாதங்களில் நிறைய நல்ல விஷயங்கள் நடக்க இருக்கிறது. இலங்கை பிரச்சனையை தீர்க்கும் ஒரே தலைவர் பிரதமர் மோடி.




பாஜகவை பொறுத்தவரை 2009க்கு பிறகு நடக்கக்கூடிய சூழலுக்கு போய்க்கொண்டு உள்ளோம். அரசாக சொல்லும் பொழுது ஏற்றுக்கொள்ளலாம். இலங்கை அரசு அதிகாரபூர்வ அமைச்சகம் சொல்வதை ஏற்றுக் கொள்கிறோம். யூகமாக காதில் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. இப்போது வரை பாஜக நிலைப்பாடு மாறவில்லை. பழ.நெடுமாறன் 2009-ஆம் ஆண்டில் என்ன சொன்னாரோ அதைத்தான் சொல்கிறார். இலங்கைப் பிரச்சினைக்கு தீர்வு கொடுக்க முடியும் என்றால் அது மோடியால் தான் முடியும் என நெடுமாறன் தெரிவித்திருந்தார். காங்கிரசும் திமுகவும் எந்த விதத்தில் கூட உகந்த கூட்டணி அல்ல. பிபிசி மீது வருமான வரித்துறை சோதனைக்கு காரணம் இல்லை. அதிகாரிகள் எவிடன்ஸ் அடிப்படையில் சோதனை செய்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.