கோவையில் பாஜக சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக நேற்று கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார். அவருடன் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது பேசிய அண்ணாமலை, “முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு பிரதமரை பலப்படுத்த போகின்றோம். பிரதமர் வலிமையாக வந்து அமரும்போது கோவையும் வளர்ச்சி பாதையை நோக்கிச் செல்லும். பாராளுமன்ற உறுப்பினர் மோடி இருக்கும் கட்சியை சார்ந்த உறுப்பினர் கோவையில்  இருக்க வேண்டும். எனவே உறவினர்கள் நண்பர்கள் அனைவரையும் தாமரைக்கு வாக்களிக்க சொல்ல வேண்டும் எனவும் தெரிவித்தார்.





வள்ளி கும்மிக்கு மிகப்பெரிய பாரம்பரியம் இருக்கிறது. சீவக சிந்தாமணியில் பேசப்பட்ட கலை வள்ளி கும்மி என தெரிவித்த அவர், ”அயோத்தியில் ராமர் கோவில் திறக்கும் போதும் வள்ளி கும்மி நடனம் ஆடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இன்று நாங்கள் ஒரு உறுதி கொடுக்கின்றோம். 2024ல் பிரதமர் ஆட்சியில் அமர்ந்த பின்னர் வள்ளிக்கு கும்மி என்று உரிய அங்கீகாரம் மத்திய அரசால் வழங்கப்படும். பாரம்பரியான கலை என்று அங்கீகாரம் கொடுக்கப்படும். அப்படி கொடுக்கும் பொழுது அரசு சார்ந்த நிகழ்ச்சிகளில் வள்ளி கும்மி ஆட முடியும், கொங்கு பாரம்பரியத்தை இந்தியா முழுவதும் எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். கோவையில் குப்பைகள் எடுக்கப்படுவதில்லை எனவும் மேயர் உள்ளிட்ட பதவிகள் டம்மியாக இருக்கின்றனர்” என அவர் தெரிவித்தார். பின்னர் அண்ணாமலை அங்கிருந்த பெண்களுடன் இணைந்து வள்ளி கும்மி ஆட்டம் ஆடினார். இதனை அருகில் இருந்தபடி வானதி சீனிவாசன் கைதட்டி ரசித்தார். அண்ணாமலை நடனமாடியது அங்கிருந்த பெண்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது.


படுகர்களுடன் நடனமாடிய எல்.முருகன்




நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் குன்னூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அதிகரட்டி, ஆருகுச்சி, தூதூர்மட்டம், சேலாஸ், இளித்தொரை, பெட்டட்டி, ஜெகதளா, காரக்தொரை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது மத்தியில் ஆளும் பாஜக அரசு மக்களுக்கு செயல்படுத்திய திட்டங்கள் குறித்தும், நீலகிரி மாவட்டத்தில் முக்கிய பிரச்சினைகள் குறித்தும், சுற்றுலா குறித்தும், தேயிலைக்கு நிரந்தர நிர்ணய விலை குறித்தும்  பொதுமக்களுக்கு எடுத்துரைத்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்ட எல்.முருகனுக்கு ஜெகதளா காரக்கொரை கிராமத்தில் படுகர் இன மக்கள் தங்களின் பாரம்பரிய உடை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்தனர்.


அப்போது படுகர் இன மக்களின் பாரம்பரிய இசைக்கு பாஜக நிர்வாகிகள் மற்றும் காரக்கொரை கிராம மக்களுடன் படுகர் இன மக்களின் இசைக்கு நடனமாடி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மத்திய இணையமைச்சர் நடனமாடியது அப்பகுதி மக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.