மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரை ஒட்டியுள்ள கோவை மாவட்டத்தில், அவ்வப்போது வனவிலங்குகள் நகரப்பகுதிகளுக்கு நுழையும் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருந்து வருகின்றனர்.

Continues below advertisement

சில தினங்களுக்கு முன்பு வெள்ளலூர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக சில வீடியோக்கள் வெளியானது. மேலும், கால்நடைகளை சிறுத்தை தாக்கி கொன்றுவிட்டதாகவும் வதந்திகள் பரவின. இதனால் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சம் நிலவியது. இந்த நிலையில், வனத்துறை அதிகாரிகள் கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், வீடியோவில் காணப்பட்ட விலங்கு சிறுத்தை அல்ல என்பது உறுதி செய்யப்பட்டது.

இதற்கிடையில், நேற்று இரவு போத்தனூர் ரயில் நிலையம் அருகே சிறுத்தை நடமாடுவதாக மற்றொரு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. அந்த வீடியோ அப்பகுதியில் காட்டுத்தீ போல பரவி, மக்கள் மத்தியில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில், சிறுத்தையை ஒத்த தோற்றமுடைய ஒரு விலங்கு சாலையின் ஓரத்தில் இருந்து தாவி காம்பவுண்ட் சுவரில் ஏறி, பின்னர் ஒரு இடத்தில் பதுங்கி இருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

Continues below advertisement

இதுகுறித்து வனத்துறையிடம் விளக்கம் கேட்டபோது, அதிகாரிகள் வீடியோவை ஆய்வு செய்து அது சிறுத்தை அல்ல என்று தெரிவித்தனர். மேலும், அந்த விலங்கு சிறுத்தை போன்ற தோற்றமுடைய காட்டு பூனை வகையைச் சேர்ந்தது எனவும் உறுதி செய்தனர். வதந்திகளை பரப்பாமல், அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்புமாறு பொதுமக்களிடம் வனத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.