கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Continues below advertisement

அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு அரசு ஊழியர் அந்தஸ்து வழங்க வேண்டும், மாத ஊதியத்தை உயர்த்த வேண்டும், ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கன்வாடி ஊழியர்கள் கைது

Continues below advertisement

இந்த போராட்டம் காரணமாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சுற்றுவட்டார பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்றுப் பாதைகளில் திருப்பி விடப்பட்டதால், பொதுமக்கள் மற்றும் அலுவலகத்திற்கு வந்தவர்கள் சிரமம் அடைந்தனர்.

போராட்டம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும், கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டத்தை கைவிட முடியாது என அங்கன்வாடி ஊழியர்கள் தெரிவித்ததால், சாலை மறியல் தொடர்ந்து நடைபெற்றது.

இதையடுத்து, சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாக்கும் நோக்கில், சாலை மறியலில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் பின்னர் காவல் துறை வாகனங்களில் ஏற்றி அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. போராட்டம் மற்றும் கைது நடவடிக்கையை தொடர்ந்து, அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.