கோவை மத்திய சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதி ஒருவர் வடிவமைத்த இ சைக்கிள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.


கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் 165 ஏக்கர் பரப்பளவில்   கோவை மத்திய சிறை அமைந்துள்ளது. இந்த சிறை கடந்த 1872-ம் ஆண்டு கட்டப்பட்டதாகும். சிறை வளாகத்தில் ஆண்கள் சிறை, பெண்கள் சிறை தனித்தனியே அமைந்துள்ளது. இதில் இதில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் என ஆண்கள் சிறையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், பெண்கள் சிறையில் 50-க்கும் மேற்பட்டோரும் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் உள்ளவர்கள் மறுவாழ்விற்காக கைத்தொழில்கள் செய்ய சிறை நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. அதேபோல ஆண்டுதோறும் சிறையில் இருந்து படித்து பலர் தேர்ச்சி பெற்று வருகின்றனர். இந்த நிலையில் ஆயுள் தண்டனை கைதி ஒருவர் வடிவமைத்த இ சைக்கிள் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.




கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருப்பவர் யுவ ஆதித்தன் (31). ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்த இவர், காதல் விவகாரம் ஒன்றில் 8 ஆண்டுகளுக்கு முன் கொலை சம்பவத்தில் குற்றவாளியாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டு ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் உள்ளார். ஏரோநாட்டிக்கல் பொறியியல் படிப்பு படித்த இவர், சிறையில் உள்ள வெல்டிங் பட்டறையில் வேலை செய்து வந்தார். அப்போது அங்கு ஓரமாக இருந்த பழைய சைக்கிளை பார்த்து, அதில் ஏதாவது செய்ய திட்டமிட்டார். அதன் அடிப்படையில் அந்த சைக்கிளில் சோலார் பொருத்தி மின்னணு சைக்கிளாக மாற்ற முயன்றார்.




இந்த சைக்கிளில் சோலார் பேனல் மட்டுமின்றி, டைனமோ உதவியுடனும் சார்ஜ் செய்ய முடியும். வழக்கமான சைக்கிள் ஆகவும், தேவைப்பட்டால், இ பைக்காகவும் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். தற்போது முதல் சைக்கிளை வடிவமைத்து இருக்கும் இவர், இன்னும் 10 சைக்கிளை வடிவமைக்க திட்டமிட்டு இருக்கின்றார். இதேபோன்று இ ஆட்டோ தயாரிப்பிலும் ஆர்வம் காட்டி வருகின்றார். ஏரோநாட்டிக்கல் படித்த பொறியியல் பட்டதாரியான இவர், ஏதோ ஒரு சூழலில் கொலை குற்றத்துக்கு உள்ளாகி, சிறைவாசம் அனுபவிக்கும் நிலையில், கற்ற கல்வியை  பயன்படுத்தி இதுபோன்று இ பைக், இ-ஆட்டோ தயாரிக்கின்ற பணியில் மும்முரமாக ஈடுபட்டிருப்பது பாராட்டுதலை பெற்றுள்ளது. மேலும் சிறையில் உள்ள கைதி வடிவமைத்துள்ள இந்த இ சைக்கிள் அனைவரையும் கவர்ந்து வருகிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண