கோவை அருகே உடல்நிலை பாதிக்கப்பட்ட பெண் காட்டு யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், அந்த யானை உயிரிழப்பிற்கு நாட்டு வெடியே காரணம் என்பது தெரியவந்துள்ளது.


கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவார வனப்பகுதிகள் காட்டு யானை உள்ளிட்ட வன விலங்குகளின் புகலிடமாக உள்ளது. வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் மலையடிவார கிராமப் பகுதிகளுக்குள் இரவு நேரங்களில் நுழைவது வழக்கம். இந்நிலையில் காரமடை அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியான வெள்ளியங்காடு பகுதியில் கடந்த ஒரு வாரமாக வாயில் காயத்துடன் ஒரு பெண் யானை சுற்றி வந்தது. அந்த யானை உடல் மெலிந்த நிலையில், மிகவும் சோர்வுடன் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.




இது குறித்து தகவலறிந்து சென்ற வனத்துறையினர் அந்த யானையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த யானையின் வாய்ப்பகுதியில் காயங்கள் இருப்பதால், தீவணங்கள் உண்ண முடியாமலும், தண்ணீர் அருந்த முடியாமலும் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த யானையை கும்கி யானை உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி பிடித்து, சிகிச்சை அளிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். அதன்படி இன்று காலை செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் நின்று கொண்டிருந்த பெண் காட்டு யானைக்கு, வனத்துறை மருத்துவர் சுகுமார் மயக்க ஊசி செலுத்தினர். பின்னர் வனத்துறையினர் யானையின் கழுத்திலும், பின்னங்கால்களிலும் கயிறுகளை கட்டி யானையை நிறுத்தினர். இதற்கு உதவியாக கும்கி யானை சின்னத்தம்பி காட்டு யானையை பிடிக்க பயன்படுத்தப்பட்டது. இதையடுத்து அந்த யானைக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுனர்.


பெண் யானையின் நாக்கின் மையப் பகுதியில் வெட்டுக்காயம் உள்ளதால், நான்கு வாரங்களாக உணவு சாப்பிட முடியாமல் யானை சுற்றி திரிந்து வந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். அந்த யானைக்கு முதற்கட்டமாக குளுக்கோஸ், ஊட்டச்சத்து மருந்துகள் உள்ளிட்டவை வழங்கி சிகிச்சையளிக்கப்பட்டது. பின்னர் அந்த யானை டாப்சிலிப் அருகேயுள்ள வரகழியாறு யானைகள் முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு கூண்டில் அடைத்து யானைக்கு சிகிச்சை அளிக்க ப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்றிரவு அந்த பெண் யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதையடுத்து யானைக்கு வனத்துறை மருத்துவர்கள் உடற்கூராய்வு செய்த போது, அந்த யானையின் வாய்ப்பகுதியில் காயம் ஏற்பட அவுட்டுகாய் எனப்படும் நாட்டு வெடியே காரணம் என்பது தெரிவந்துள்ளது. அவுட்டுகாய் மூலம் யானை உயிரிழக்க காரணமானவர்கள் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண