வால்பாறை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ  கந்தசாமி திடீர் உடல்நலக்குறைவால் இன்று காலமான நிலையில் அவரது மறைவு அதிமுகவினர் மத்தியில் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது

அமுல் கந்தசாமி: 

கோவை மாவட்டம் அன்னூர் பகுதியை சேர்ந்தவர் அமுல் கந்தசாமி. அதிமுகவை சேர்ந்த இவர் வால்பாறை சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்ப்பட்ட நிலையில் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்ப்படாத நிலையில் கோவையில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது பரிசோதனை செய்துப்பார்த்த போது அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.பின்னர் அவருக்கு ஐசியூவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர்  இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

2021 தேர்தலில் வெற்றி: 

அதிமுக கட்சியில் 2020 ஆம் ஆண்டில் கோவை மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவராக தேர்ந்தெடுத்தப்பட்டார்.பின்னர் 2021 ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டமனற தேர்தலில் தனக்கு எதிராக போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) வேட்பாளரை தோற்கடித்து வெற்றி பெற்றார். 

ஈபிஎஸ் இரங்கல்: 

அவரது மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணைச் செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்டம், வால்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திரு. T.K. அமுல்கந்தசாமி அவர்கள் உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். கழகத்தின் மீதும், கழகத் தலைமையின் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டு பணியாற்றி வந்த அன்புச் சகோதரர் திரு. அமுல்கந்தசாமி அவர்கள், மாவட்ட மாணவர் அணிச் செயலாளர், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் திறம்பட கழகப் பணிகளை ஆற்றியவர்.

அதே போல், கோவை மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவராகவும், தற்போது வால்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் நல்ல முறையில் மக்கள் பணியாற்றிவர். அன்புச் சகோதரர் திரு. அமுல்கந்தசாமி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், இந்தத் துயரத்தைத் தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் அளிக்க வேண்டும் என்றும், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.