கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் நடைபெற்ற தனது குடும்ப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதா உடன் கோவைக்கு வருகை தந்தார். நடிகர் ரஜினிகாந்த் வருவதை முன்னரே அறிந்த அவரது ரசிகர்கள், கோவை விமான நிலையம் முன்பாக கூடியிருந்தனர்.


இந்நிலையில் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையத்திற்கு வந்த ரஜினிகாந்திற்கு அவரது ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் பதிலளிக்க தயாரான நிலையில், கூட்ட நெரிசலால் அவரால் சரிவர பதிலளிக்க முடியவில்லை. ஓரிரு வார்த்தைகளாக தனது குடும்ப நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கோவை வந்துள்ளதாக கூறினார். தொடர்ந்து காரின் மேல் நின்றவாறு ரசிகர்களுக்கு கையசைத்து அங்கிருந்து விடை பெற்றார்.




முடி காணிக்கை:


கோவை சூலூரில் உள்ள மீனாட்சி அம்மன் கோவிலில் சௌந்தர்யா ரஜினிகாந்த்தின் ஆண் குழந்தைக்கு முடிக்காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த் மற்றும் அவரது மருமகன் விசாகன் குடும்பத்தினர் மட்டும் கலந்து கொண்டனர். நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா மற்றும் கோவை சூலூரை சேர்ந்த தொழிலதிபர் வணங்காமுடி என்பவரது மகன் விசாகனை கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.


கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இருவருக்கும் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி என பெயர் சூட்டப்பட்டது. இந்த நிலையில் சௌந்தர்யாவின் கணவர் விசாகனின் குலதெய்வ கோவிலான சூலூரில் உள்ள மீனாட்சியம்மன் கோவிலில் இன்று குழந்தைக்கு முடி காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.


உற்சாக வரவேற்பு:


இதற்காக கோயில் வளாகத்தில் சிறப்பு மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகளுடன் சௌந்தர்யா ரஜினிகாந்த் குடும்பத்தினர் சார்பில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரது மருமகன் விசாகனின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். கோவை புறநகரில் உள்ள நட்சத்திர விடுதியில் முடி காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்ற குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களுக்கு மதிய விருந்து அளிக்கப்பட்டது. இதில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். முடி காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சிக்காக விசாகன் மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த் தம்பதியினர் தங்களது குழந்தையுடன் கடந்த இரண்டு நாட்களாக  கோவையில் முகாமிட்டு விழா ஏற்பாடுகளை கவனித்து வந்தனர்.