கோவையில் ஐ.எச்.எஸ் அமைப்பு சார்பில் வரும் நவம்பர் மாதம் முதல் போலோ பிரிமியர் லீக் மற்றும் இந்தியாவின் குதிரையேற்ற சாம்பியன்ஸ் லீக் போட்டிகள் நடத்தப்படுகின்றது. இதற்கான லோகோ வெளியீட்டு விழா, நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், திரைப்பட நடிகர் பிரசாந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். குதிரையேற்ற போட்டி மற்றும் போலோ போட்டிகள் ஆகிய இரு போட்டிகளும் நவம்பர் 20 ம் தேதி முதல் 30 ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல் முறையாக பிற விளையாட்டுகளை போல போலோ பிரிமியர் லீக் போட்டிகளும் நடத்தப்பட இருக்கிறது.


குதிரை விளையாட்டு


முன்னதாக நடிகர் பிரசாந்தின் திரைப்படப் பாடலுக்கு நடன நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து ஆகஸ்ட் 15ம் தேதி திரைக்கு வரக்கூடிய நடிகர் பிரசாந்தின் அந்தகன் திரைப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. இதனைதொடர்ந்து நடிகர் பிரசாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், இது ஹிஸ்டரி மேக்கிங் என்றும், குதிரை விளையாட்டு மூலம் அதற்கான ஒரு கட்டமைப்பை செய்து வருகிறோம் எனவும் கூறிய அவர், கிரிக்கெட்டில் ஐ.பி.எல் போன்று இனி இந்த போட்டிகளுக்கு பி.பி.எல் இருக்கும் எனவும் தெரிவித்தார். சின்ன வயதில் இருந்து குதிரை விளையாட்டு எனக்கு பிடிக்கும், என்னுடைய படங்களிலும் குதிரைகளை கொண்டு வந்து விடுவேன் எனவும், குதிரை எனக்கு பிடித்த விலங்கு எனவும் தெரிவித்தார். படப்பிடிப்பு போது குதிரையில் பயணித்த நிகழ்வுகளை பகிர்ந்த அவர், தமிழர்கள் ஒரு செயலை செய்யும் போது அதை ஆதரிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.


அந்தகன் திரைப்படம்


அந்தகன் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியீடு உள்ளது எனவும், அந்தகனில் எல்லா விதமான பிரசாந்தையும் பார்க்கலாம் என தெரிவித்த அவர், அந்தகன் படத்தில் நடித்தவர்கள் அனைவருக்கும் நன்றிகள் தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்தார். GOAT படம் பண்ண காரணமாக மூன்று பேருக்கு நன்றி தெரிவித்துள்ளேன். கடந்த காலங்களில் மல்டி ஸ்டார் படம் செய்து உள்ளேன் எனவும், தமிழ் சினிமாவில் ஆரோக்கியமான போட்டி நல்லது எனவும் தெரிவித்தார். நல்ல கதை இருந்தால் முழு நேர காமெடி படம் செய்ய தயார் என  கூறிய அவர், அப்பா திறமையான இயக்குநர், டெக்னாலஜி கற்றுக் கொண்டு அவற்றை படத்தில் பயன்படுத்தியுள்ளார் எனவும், 2026 அரசியல் பயணம் பற்றி அப்பறம் பேசலாம் என தெரிவித்தார். ஒரு படம் எல்லாருக்கும் பிடிக்கணும் என்பது இல்லை, அது அவர்களின் கருத்து எனவும்,கருத்து யார் வேண்டுமானல் சொல்லலாம் எனவும், மக்களுக்கு யார் நல்லது செய்கிறார்களோ அவர்களுக்கு ஆதரவளிப்பேன் எனவும் நடிகர் பிரசாந்த் தெரிவித்தார்