நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி தயாரிப்பில், 96 திரைப்பட இயக்குநர் ப்ரேம்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மெய்யழகன். இந்த திரைப்படத்தில் நடிகர்கள் கார்த்தி, அரவிந்த் சுவாமி, நடிகை ஸ்ரீ திவ்யா உள்ளிட்டோர் நடித்து உள்ளனர். இந்தப் படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். மெய்யழகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று கோவை கொடிசியா அரங்கத்தில் நடைபெற்றது. இந்த திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் ஒரு பாடலை பாடியுள்ளார். இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் நடிகர்கள் சிவகுமார், கார்த்தி, அரவிந்த் சுவாமி, நடிகை ஸ்ரீ திவ்யா, இயக்குநர் பிரேம்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


இதற்கு முன்னதாக மெய்யழகன் திரைப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகள், இசை அமைப்பாளர், பாடகர்கள் மற்றும் திரைப்பட குழுவினர் அப்படம் குறித்த கருத்துகளை செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டனர்.


இணை தயாரிப்பாளர் பேட்டி


இதனிடையே நடிகை ஸ்ரீ திவ்யா செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “நான் திரைப்படங்களை தேர்வு செய்து தான் படம் செய்கிறேன். அதனால் இடைவெளி தமிழில் இருக்கலாம்” எனத் தெரிவித்தார். இதையடுத்து பேசிய படத்தின் இணை தயாரிப்பாளர் ராஜ சேகர் கற்பூர சுந்தரபாண்டியன், “உறவுகளை பற்றிய படம் என்பதால் இசை வெளியிட்டு விழாவை நடத்த கோவையை தேர்வு செய்து உள்ளோம். படத்தின் கதை தஞ்சாவூர் பகுதியில் நடப்பது போன்று உள்ளது. ஆனால் கதையின் கதையின் கரு மையம் கோவை என்பதால் படத்தின் இசை வெளியீட்டு விழாவை, கோவையில் நடத்துகிறோம். எல்லாரையும் மரியாதையாக நடத்தும் மக்கள் கோவை மக்கள் தான். நான் மதுரைகாரர். உணர்வுபூர்வமான படமாக மெய்யழகன் இருக்கும். நமக்கு தெரியாமலேயே நம் மீது அன்பும், அக்கறையும் கொண்டவர்கள் பற்றிய கதை இது. இந்தப் படத்தை பார்த்த பிறகு உங்களது சொந்தங்களுக்கு அழைத்து பேச வைக்கும் வகையில் இந்தப் படம் இருக்கும்” எனத் தெரிவித்தார்.




நடிகர் கார்த்தி பேட்டி


இதன் பின்னர் நடிகர் கார்த்தி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “எனது கல்யாணத்திற்கு பிறகு கோவையில் நடக்கும் நிகழ்ச்சி இது. கோவையில் ஆடியோ வெளியீட்டு விழா நடத்துவது அர்த்தமுள்ளதாக இருக்கும் என நடத்துகிறோம். எனது வேர்கள், உறவுகள் இங்கு தான் உள்ளது. 96 படத்தை இயக்கிய இயக்குநர் பிரேம் 6 ஆண்டுகளுக்கு பிறகு படம் இயக்கியுள்ளார். மெய்யழகன் அற்புதமான படமாக இருக்கும். இந்தப் படம் திருப்திகரமாக வந்துள்ளது. அரவிந்த் சுவாமி உடன் போட்டி போட்டு நடிக்கவில்லை. நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து நடிக்கும் போது, படத்திற்கு அழகு வந்துள்ளது. நாங்கள் இரண்டு பேரும் படம் முழுக்க வருவோம்.


நான் ஒரே மாதிரியான கதைகளை தேர்வு செய்யவில்லை. வித்தியாசமாக கதைகளை தான் தேர்வு செய்து நடக்கிறேன். இந்தப் படம் தஞ்சாவூரை சார்ந்த படம். இந்தப் படம் 1996 காலகட்டத்தில் நடப்பது போல எடுக்கப்பட்டுள்ளது. படம் பற்றி நானும் சொல்ல மாட்டேன். படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இந்தப் படம் எமோஷனாலாக இருக்கும். நாம் எல்லாரும் எமோஷனா ஆட்கள் தான்” எனத் தெரிவித்தார்.