எருமை, பசு மாடுகள் மீது ஆசிட் வீசிய கொடூர சம்பவம் - மேட்டுப்பாளையம் அருகே அதிர்ச்சி

கல்லார் அருகே மேய்ச்சலுக்கு சென்ற 4 பசு மாடு உட்பட 40 எருமை மாடுகளின் மீது ஆசிட் வீசிய சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Continues below advertisement

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கல்லார் அருகே மேய்ச்சலுக்கு சென்ற 4 பசு மாடு உட்பட 40 எருமை மாடுகளின் மீது ஆசிட் வீசிய சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Continues below advertisement

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் - உதகை சாலையில் உள்ள ரயில்வே கேட் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். 39 வயதான இவர் விவசாயியாக உள்ளார். இவர் 10 ஏக்கர் விவசாய விளை நிலத்தை குத்தகைக்கு எடுத்தும், தனக்கு சொந்தமான 2 ஏக்கர் விவசாய விளை நிலத்தில் பாக்கு மற்றும் வாழைகளை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார். மேலும் ஆடு, மாடு மற்றும் எருமை மாடு என கால்நடைகளையும் வளர்த்து பராமரித்து வருகிறார். தினசரி காலை 8 மணிக்கு விவசாய கூலி தொழிலாளி கால்நடைகளை மேய்ச்சலுக்காக அருகே உள்ள வயலுக்கு அழைத்துச் சென்று விட்டு, மாலை நேரத்தில் கால்நடைகளை திரும்பவும் ஓட்டி வந்து வீட்டில் கட்டி விட்டு சென்று விடுவது வழக்கம். 


இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு யாரோ அடையாளம் தெரியாத மர்ம ஆசாமிகள் கால்நடைகளின் முகம் மற்றும் உடலின் மேல் பகுதியில் ஆசிட்டை வீசியும், ஊற்றியதாகவும் தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து விவசாயி ராஜ்குமாருக்கு உடனடியாக தெரியவில்லை. இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பசு மற்றும் எருமை மாடுகளின் உடலில் திடீரென ஏற்பட்ட மாற்றங்கள் தெரியவந்தது. 


ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட கால்நடைகள் தாங்கள் படும் வேதனைகளை வெளியே சொல்ல முடியாமலும், எரிச்சலை தாங்க முடியாமலும் கத்திக் கொண்டே இருந்துள்ளன. ஆசிட் வீச்சால் பசு மற்றும் எருமை மாடுகளின் முகம் மற்றும் உடலின் இரண்டு புறமும் மேல் பகுதியில் தோல் வெந்து உரிந்து கருகி காணப்பட்டது. இதனைக் கண்டதும் விவசாயி ராஜ்குமார் அதிர்ச்சி  அடைந்தார். ஆசிட் வீசியதால் எரிச்சலால் அவதிப்பட்டு வந்த 4 பசு மாடு உள்பட 40 எருமை மாடுகளின் நிலை கண்டு அவர் கவலை அடைந்தார்.  


இதுகுறித்து விவசாயி ராஜ்குமார் மேட்டுப்பாளையம் காவல் துறை வனத்துறை மற்றும் கால்நடை மருத்துவர் அலுவலருக்கு தகவல் அளித்தார். இதன் பேரில் வந்த கால்நடை மருத்துவ குழுவினர் ஆசிட்டால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். முன் விரோதம் காரணமாக அடையாளம் தெரியாத நபர்கள் கால்நடைகள் மீது ஆசிட் வீசினார்களா அல்லது வேறு எதேனும் காரணமா என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்லார் பகுதியில் கால்நடைகளின் மீது ஆசிட் வீசிய கொடூர சம்பவம் அந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கால்நடைகள் மீது ஆசிட் வீசிய செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola