கோவை மருதமலை பகுதியில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். அப்பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விடுதியில் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர். இந்நிலையில் நள்ளிரவு இரவு 11 மணி முதல் அதிகாலை மூன்று மணி வரை மர்ம நபர்கள் விடுதிகளுக்குள் உலா வருவதாகவும், அறை கதவை தட்டுவதாகவும் மாணவிகள் புகார் தெரிவித்தனர். மேலும் பெண்கள் உடையணிந்தபடி ஒரு நபர் உலா வந்ததால் மாணவிகள் அச்சம் அடைந்தனர். இது தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி, கடந்த 31 ஆம் தேதி 500க்கும் மேற்பட்ட மாணவிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


பல்கலைக்கழகத்தின் வாயிலில் திரண்ட மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதோடு சாலை மறியலிலும் ஈடுபட முயன்றனர். அப்போது விடுதியில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் செயலிழந்துள்ளதோடு விடுதி காப்பாளர்கள் ரோந்து பணியை மேற்கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டினர். மாணவிகள் தங்கியுள்ள விடுதிகளில் உடனடியாக சிசிடிவி கேமராக்களை பொருத்துவதோடு, தங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் மாணவிகள் வலியுறுத்தினர்.


இதையடுத்து வடவள்ளி காவல் துறையினர் மற்றும் பல்கலைக்கழக துணைவேந்தர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சந்தேக நபரின் நடமாட்டம் குறித்து காவல்துறையினர் மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பெண்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படும் என்றும் பல்கலைக்கழக துணைவேந்தர் மாணவிகளிடம் அளித்த உத்திரவாதத்தை ஏற்று கலைந்து சென்றனர். இதையடுத்து கடந்த 10 தேதி அதிகாலையில் பெண்கள் விடுதி பகுதியில் சந்தேக நபரின் நடமாட்டம் இருந்ததாகவும், மாணவிகள் தங்கியிருக்கும் ஒரு அறையின் ஜன்னல் வழியாக லேப்டாப் எடுக்க முயற்சித்ததாகவும் மாணவிகள் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக பல்கலைக்கழக பதிவாளர் அளித்த புகாரின் பேரில், வடவள்ளி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தொடர்ந்து சந்தேக நபர் பற்றி விசாரணை மேற்கொண்டனர். 


இந்நிலையில் இன்று அதிகாலை கல்வீராம்பாளையம் டான்சா நகர் பகுதிகளில் காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித் திரிந்து கொண்டிருந்த கல்வீராம்பாளையம் பகுதியை சேர்ந்த சுரேந்தர் (]19) என்பவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அந்த இளைஞர் பாரதியார் பல்கலைக்கழக விடுதியில் இரவு நேரங்களில் உலா வந்த நபர் என்பது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் பாரதியார் பல்கலைக்கழக விடுதி பகுதியில் சுவர் ஏறி குதித்து சென்றதாகவும், கடந்த 10 நாட்களுக்கு முன்பு சுவர் ஏறி குதித்து சென்று லேப்டாப் திருட முயன்றதாகவும் ஒப்புக்கொண்டார். மேலும் கைது செய்யப்பட்ட நபர் அடையாளம் தெரியாமல் இருக்க பல்கலைக்கழக விடுதியில் உள்ள மாணவிகளின் உடைகளை தன் உடை மீது அணிந்து  உலா வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சுரேந்தர் மீது இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் கைது செய்தனர்.