ஒவ்வொருவர் வாழ்விலும் முக்கியமானது வாழ்விடம். அதனால் தான் வீடுகள் மீது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கனவுகள் இருக்கின்றன. வீடுகள் பெருகிக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில், சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் வீடுகளை கட்ட சிலர் முயன்று வருகின்றனர். அந்த வகையில் கோவை உடையாம்பாளையம் பகுதியை சேர்ந்த முருகேசன் என்ற இண்டிரியர் டிசைனர், பிரிட்டீஷ் கால கட்டிட முறையில் தனது வீட்டினை கட்டி வருகிறார்.




இதுகுறித்துப் பேசிய முருகேசன், ”ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் மன்னர்களின் அரண்மனைக்கு போட்டியாக தங்களது வாழ்விடங்களை அமைக்க விரும்பினர். பிரிட்டிஷ் முறையில் கட்டப்பட்ட அந்த வீடுகள் இந்திய தட்ப வெப்ப நிலைக்கு உகந்ததாக அமையவில்லை. இதனால் ஆங்கிலேய பொறியாளர்கள் இந்தியாவில் உள்ள கட்டுமானங்களை ஆராய்ந்து பிரிட்டீஷ் கலோனியல் ஆர்கிடச்சர் என்ற முறையை கண்டறிந்தனர். இந்த முறை என்பது மொகலயா கட்டிடக் கலை, இந்து கோவில் கட்டிடக்கலை மற்றும் பிரிட்டீஸ் கட்டிடக்கலை ஆகிய மூன்று கட்டிடக் கலைகளின் கூட்டு வடிவ கட்டிடக் கலையாகும். இந்த கட்டிடங்கள் 200 ஆண்டுகள் தாண்டியும் உறுதித்தன்மையுடன் விளங்கி வருகின்றன.




இந்த பிரிட்டீஷ் கலோனியல் ஆர்கிடச்சர் முறையில் 2500 சதுர அடியில் வீடு கட்டியுள்ளேன். முழுக்க செங்கற்களை கொண்டு வீடு கட்டப்பட்டுள்ளது. இந்த முறையில் கம்பி, கான்கீரிட் பயன்பாடு மிகவும் குறைவாகவே பயன்படுத்தப்பட்டது. தூண்கள் அமைக்கப்படவில்லை. மற்ற கட்டிடங்களுடன் ஒப்பீடும் போது நான்கில் ஒரு பங்கு கான்கீரிட் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. கூரைக்கு மட்டுமே கான்கீர்ட் குறைந்த அளவில் பயன்படுத்தப்பட்டது. வேறு எங்கும் கான்கீரிட் பயன்படுத்தவில்லை. சாதாரணமாக கிடைக்கக்கூடிய பொருட்களை கொண்டு வீடு கட்டப்பட்டது. ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட கருங்கல்கள் அடித்தளத்திற்கு மறு பயன்பாடு செய்யப்பட்டது. ரூபிங் பில்லர் ஸ்லாப் என்ற முறையில் மண் சட்டிகள் மூலம் அமைக்கப்பட்டுள்ளது.




வெளியே இருந்து பார்க்கும் போது வீடு செவ்வக வடிவத்தில் தெரியும். வீட்டின் வரவேற்பு அறை வட்ட வடிவிலும், அறைகள் முக்கோண வடிவிலும் கட்டப்பட்டுள்ளது. வழக்கமாக கட்டப்படும் சதுர, செவ்வக வடிவ அறைகளினால் நான்கு மூலைகள் பயன்படுத்தப்படாமல் உள்ளன. இம்முறையினால் இட விரயம் தவிர்க்க முடியும். சுடுமண் ஓடுகள் தரையில் பயன்படுத்தியுள்ளோம். அறைகளின் உயரம் 11 அடி என்றளவில் வழக்கத்தை விட கூடுதல் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இது அறையின் தட்ப வெப்ப நிலையை சமமாக நிலைப்படுத்த உதவும். காற்றோட்டம், சூரிய வெளிச்சம் காரணமாக குளிர் சாதன வசதி பயன்படுத்த வேண்டிய தேவையில்லை. இதனால் மின்சார பயன்பாடு குறையும். வீட்டின் தரைக்கு டைல்ஸ், கிரைனைட், மார்பிள் ஆகியவற்றை பயன்படுத்தவில்லை. வெளிப்பூச்சு, வண்ணம் அடித்தல் ஆகியவை தேவையில்லை. அதனால் ஏற்படக்கூடிய செலவுகள் தவிர்க்கப்பட்டுள்ளது. 




கட்டிடக் கழிவுகள் என்பது என்பது சூழலுக்கு சவாலாக விளங்கி வருகின்றன. இந்த வீட்டில் உள்ள பொருட்களை மறு சுழற்சி முறையில் மறு பயன்பாடு செய்ய முடியும். அதேசமயம் பயிற்சி பெற்ற திறன்வாய்ந்த தொழிலாளர்கள் கிடைப்பது என்பது தான் சாவலாக இருந்தது. நவீன கட்டுமானத்திற்கு ஆகும் செலவே இந்த வீடு கட்டவும் செலவானது. இம்முறையில் தனித்துவம் வாய்ந்த சூழலுக்கு உகந்த அழகிய வீடு கட்ட முடியும். நவீன கட்டுமானத்தை விட இம்முறையினால் பல பயன்கள் கிடைக்கும்” என அவர் தெரிவித்தார். இந்த வீட்டின் பலரும் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண