கோவை மாநகர பகுதிகளின் குடிநீர் ஆதாரமாக சிறுவாணி அணை மற்றும் பவானி அணைகள் இருந்து வருகின்றன. கேரள மாநிலத்திற்கு உட்பட்ட முத்திக்குளம் பகுதியில் உருவாகும் சிறுவாணி ஆறு, கூடுதுறை என்ற இடத்தில் பவானி ஆற்றில் இணைகிறது. இந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணையும், கோவை மாவட்டம் காரமடை அருகேயுள்ள பில்லூர் அணையும் கோவையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றன‌. இந்த நிலையில் சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை தடுப்பணைகளை கட்டும் பணிகளை கேரள அரசு துவக்கியுள்ளது.


அட்டப்பாடி கூலிகடவு - சித்தூர் சாலையில் நெல்லிப்பதி என்ற இடத்தில் சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இதன் காரணமாக கோடை காலங்களில் பில்லூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைய வாய்ப்புள்ளது என அரசியல் கட்சியினர் மற்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். சிறுவாணி மற்றும் பவானி ஆறுகள் காவிரி ஆற்றின் கிளை நதிகளாக உள்ளதால், இந்த ஆறுகளின் குறுக்கே எந்தவித கட்டுமான பணிகளை மேற்கொள்ளவும் காவிரி மேலாண்மை வாரியத்தில் அனுமதி பெற வேண்டும். ஆனால் கேரள அரசு எவ்வித அனுமதியும் பெறாமல் தடுப்பணைகளை கட்டி வருகிறது என குற்றச்சாட்டு எழுந்தது. தடுப்பணை கட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.




இந்நிலையில் சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரள அரசைக் கண்டித்து, கோவை காந்திபுரம் பகுதியில் மத்திய பேருந்து நிலையத்தில் அனைத்து கட்சி சார்பில் கேரள பேருந்தை சிறைபிடித்து போராட்டம் நடத்தப்பட்டது. தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், மதிமுக, தமிழ் புலிகள், எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் கலந்து கொண்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 50 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.


அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் கூறும் போது,  "கோவையில் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ள பில்லூர் அணைக்கு வரும் நீரை கேரளா அரசு தடுப்மணை மூலம் தடுக்கிறது. தற்போது 50 அடி வரை கொள்ளளவு கொண்ட சிறுவாணி அணையில் முழு கொள்ளளவிற்கு கேரளா அரசு விடுவதில்லை. 45 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்க அனுமதி அளித்து வருகின்றனர். சிறுவாணி அணையின் பராமரிப்பை தமிழக அரசு செய்து வருகிறது. இருப்பினும் கோவை சாடிவயலில் இருந்து சிறுவாணி வரை வனப்பகுதியில் உள்ள சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது. ஆனால் கேரளா அரசு இதுவரை சாலையை சீர் செய்யவில்லை.




தற்போது தமிழக விவசாயிகள் எதிர்ப்பை மீறி சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகளை கேரள அரசு கட்டி வருகிறது. தமிழ்நாடு அரசு கேரள அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி தடுப்பணைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கேரள அரசு தடுப்பணை கட்டுவதை கைவிட வேண்டும். இல்லையெனில் கேரளா எல்லைகளில் போராட்டம் நடந்துவோம்" எனத் தெரிவித்தார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண