கோவை மாவட்டம் வடவள்ளி அருகே உள்ள ஓணாப்பாளையம் பகுதியில் கடந்த 9ஆம் தேதி தனியார் தங்கும் விடுதி அருகில் கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. அந்த காருக்கு பின்னால் ஒருவர் பிணமாக கிடந்தார். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் வடவள்ளி காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வடவள்ளி காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி, உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து சந்தேக மரணம் என காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். காவல் துறையினர் நடத்திய விசாரணையில், உயிரிழந்த நபர் வெள்ளலூர் மகாலிங்கபுரம் பகுதியை சேர்ந்த சானு (31) என்பதும், ரெட் டாக்சி ஓட்டுநராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.


இதனிடையே அவரது உடலில் பல்வேறு காயங்கள் இருந்ததை அறிந்ததை தொடர்ந்து, அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் சானு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் எனக் கூறி அவரது உடலை உறவினர்கள் மற்றும் சக டாக்சி ஓட்டுநர்கள் வாங்க மறுத்து அரசு மருத்துவமனை வளாகத்தில் போராட்டம் மேற்கொண்டனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் தெரிவித்ததைத் தொடர்ந்து அவரது உடல் உறவினர்களால் பெற்றுக் கொள்ளப்பட்டது. 




இந்த சம்பவம் குறித்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் உத்தரவின் பேரில், 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் 8ம் தேதி சென்னையை சேர்ந்த ஸ்டீபன் என்பவர் அந்த டாக்ஸியில் பயணித்தது தெரியவந்தது. இதையடுத்து ஸ்டீபனை பிடித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பணத்திற்காக ஸ்டீபனும் அவரது மனைவி அமலோற்பவமும் சேர்ந்து ஓட்டுநரை கட்டையால் தலையில் அடித்தும், விஷ ஊசி செலுத்தியும் கொலை செய்தது தெரியவந்தது. 


இதனையடுத்து காவல் துறையினர் ஸ்டீபன் மற்றும் அமலோற்பவம் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இவர்களிடமிருந்து கொலை செய்து கொள்ளையடித்த 6100 ரூபாய் பணம், கொலை செய்ய பயன்படுத்திய மரத்தடி, 20 செல்போன்கள், ஒரு மடிக்கணினி, ஒரு டேப் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இருவரிடமும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், சென்னையில் இருவர் மீதும் ஏற்கனவே இரண்டு கொலை வழக்குகளும், ஸ்டீபன் மீது மேலும் இரண்டு கொலை வழக்குகளும், ஒரு ஆயுத வழக்கும் இருப்பது தெரியவந்தது. மேலும் அந்த கொலை வழக்குகளில் இதேபோல உடலில் விஷ ஊசி செலுத்தி கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து இருவரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.