கோவையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் கேட்டவரிடம் விசாரணை நடத்தி துன்புறுத்திய விவகாரத்தில், மனித உரிமை ஆணையம் உத்திரவின் ஒரு லட்ச ரூபாயை பாதிக்கப்பட்ட நபருக்கு மாவட்ட கண்காணிப்பாளர் வழங்கினார்.


கோவை மாவட்டம் திருமலையாம்பாளையம் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவர் சட்டக் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் இவர் மாநில மனித உரிமை ஆணையத்தில் ஒரு புகார் அளித்து இருந்தார். அதில், ‘நான் கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் திருமலையாம்பாளையம் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை பணிகளில் முறைகேடுகள் நடப்பது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேள்விகளை கேட்டேன். அதற்கு பேரூராட்சி செயல் அலுவலர் தொலைபேசியில் மிரட்டல் விடுத்தார்.அதே சமயம், பேரூராட்சி தற்காலிக ஓட்டுநர் ஒருவர் இதுபோல கேள்வி கேட்கக்கூடாது என எனக்கு மிரட்டல் விடுத்தார். குடும்பத்தினரையும் அவர் மிரட்டினார். அது தொடர்பாக ..சாவடி காவல் நிலையத்திலும், கோவை மாவட்ட ஆட்சியரிடமும் புகார் அளித்தேன்.


சில நாட்கள் கழித்து அப்போதைய மதுக்கரை காவல் நிலைய ஆய்வாளர் தூயமணி வெள்ளைசாமி, வடவள்ளி காவல் ஆய்வாளர் மணிவண்ணன், ..சாவடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆனந்தகுமார் மற்றும் 2 காவலர்கள் எனது வீட்டிற்கு நள்ளிரவில் வந்து விசாரணை எனக்கூறி, என்னை வெளியே அழைத்துச் சென்றனர். நள்ளிரவு 2 மணி முதல் 4 மணி வரை ஆர்.டி..யில் கேள்வி கேட்டதற்காக எனக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் என்னிடம் விசாரணை நடத்தினர். பின்னர் மறுநாள் டி.எஸ்.பி.யை சந்திக்க வேண்டுமென சொன்னார்கள். அதன்படி அவரது அலுவலகத்திற்கு சென்ற போது, டி.எஸ்.பி. இல்லை. கேள்வி கேட்டதற்கான என்னை அலைகழித்தனர். இது அப்பட்டமான மனித உரிமை மீறல். இது தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்என கூறப்பட்டிருந்தது.


இதன் பேரில் மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தியது. விசாரணை முடிவில் தமிழ்நாடு அரசின் உள்துறை முதன்மை செயலருக்கு மாநில மனித உரிமை ஆணையம் ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதில் மனித உரிமை மீறலால் பாதிக்கப்பட்ட ரமேஷ்குமாருக்கு ஒரு இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும் காவல் ஆய்வாளர்கள் தூயமணி வெள்ளைசாமி, மணிவண்ணன் ஆகியோரிடம் இருந்து தலா 25 ஆயிரம் ரூபாயும், உதவி ஆய்வாளர் ஆனந்தகுமாரிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாயும் ஊதியத்தில் இருந்து வசூலித்து ரமேஷ்குமாருக்கு வழங்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.


மனித உரிமை ஆணையம் உத்தரவின் பேரில் அபராதத் தொகையான ஒரு லட்ச ரூபாய் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளரிடமிருந்து பெறப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்ட வழக்கறிஞர் ரமேஷ்குமாரிடம் லட்ச ரூபாய்க்கான காசோலையை கோவை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் வழங்கினார். மனித உரிமை ஆணையத்தின் உத்தரவின் பேரில் காவல் துறையினரிடம் அபராதம் வசூலித்து வழங்கியது போல, தன்னை துன்புறுத்திய காவல் துறை அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரமேஷ்குமார் தெரிவித்தார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண