கோடநாடு வழக்கில் 3 செல்போன்கள்... 6 சிம் கார்டுகள் பறிமுதல்: நீதிமன்றத்தில் போலீஸ் தகவல்!

இதுவரை கனகராஜின் வீட்டில் இருந்து 3 செல்போன்கள், 6 சிம்கார்டுகள் கைப்பற்றப்பட்டு இருப்பதாகவும், இவ்வழக்கில் மேலும் சிலரை விசாரிக்க வேண்டி இருப்பதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.

Continues below advertisement

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான நீலகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இரவில் ஆயுதங்களுடன் எஸ்டேட்டுக்குள்  அத்துமீறி நுழைந்த கும்பல், பாதுகாவலராக இருந்த ஓம்பகதூர் என்பவரை கொலை செய்து விட்டு, சில மதிப்புமிக்க பொருட்களை திருடிச் சென்றது. இது தொடர்பாக சயன், சதீசன், உதயகுமார், ஜம்சிர் அலி, தீபு, சந்தோஷ், திலிப் ஜாய், வாளையார் மனோஜ், மனோஜ்  உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கோடநாடு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜ், சேலம் மாவட்டத்தில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

Continues below advertisement


இதனிடையே கோடநாடு வழக்கில் கூடுதல் விசாரணையை துவக்கிய நீலகிரி காவல் துறையினர், இவ்வழக்கில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாக கூறிய சயன் உள்ளிட்டோரிடம் விசாரணை செய்தனர். இதையடுத்து  ஏடிஎஸ்பி தலைமையில் 5 தனிப் படைகள் அமைத்து கூடுதல் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சாட்சிகள், குற்றம் சாட்டப்பட்டவர்கள், அவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என கூடுதல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


இவ்வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட சயன், ஜம்சிர் அலி, சந்தோஷ் சாமி, மனோஜ் சாமி,  சதீசன், பிஜின் குட்டி ஆகிய 6 பேரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி இரகசிய வாக்குமூலம் பெற்றுள்ளனர். இதனிடையே கோடநாடு கம்யூட்டர் ஆப்ரேட்டர் தினேஷ்குமார் தற்கொலை வழக்கு மற்றும் கனகராஜ் விபத்து வழக்குகளை காவல் துறையினர் மறு விசாரணை நடத்தி வருகின்றனர்.


இந்நிலையில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சாட்சியங்களை அழித்ததாக கனகராஜின் சகோதாரர் தனபால் (44) மற்றும் அவரது உறவினர் ரமேஷ் (34) ஆகியோரை கடந்த மாதம் 25 ம் தேதி நீலகிரி மாவட்ட காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் நீதிமன்ற காவலில் கூடலூர் கிளைச் சிறையில் இருவரும் அடைக்கப்பட்டனர்.


கோடநாடு வழக்கில் கூடுதல் விசாரணைக்கு பின்னர் முதல் முறையாக இருவர் கைது செய்யப்பட்டனர். இருவர் மீதும் சாட்சியங்களை மறைத்தல், சாட்சியங்களை அழித்தல், சாட்சிகளை தடுத்தல் உட்பட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இருவரையும் காவல் துறையினர் 11 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்தனர்.


இதனிடையே கடந்த 2 ம் தேதி தனபால் மற்றும் ரமேஷ் இருவரும் நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது இருவருக்கும் ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதாகவும், இருவரிடமும் மேலும் விசாரணை நடத்த வேண்டியுள்ளதாகவும் கூறி அரசு தரப்பில் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதுவரை கனகராஜின் வீட்டில் இருந்து 3 செல்போன்கள், 6 சிம்கார்டுகள் கைப்பற்றப்பட்டு இருப்பதாகவும், இவ்வழக்கில் மேலும் சிலரை விசாரிக்க வேண்டி இருப்பதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி சஞ்சய் பாபா இருவரின் ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola