கோவை மாவட்டத்தில் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் இன்று சூலூர் பகுதியில் கஞ்சா சாக்லேட்டுகள் விற்பனைக்கு வைத்திருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் சூலூர் காவல் துறையினர் பெருமாள் கோவில் அருகே சோதனை மேற்கொண்டனர். அப்போது  அப்பகுதியில் கஞ்சா சாக்லேட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த ராஜ்குமார் ராய் (28)  என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 2.500 கிலோ  எடையுள்ள கஞ்சா சாக்லேட்டுகளையும் காவல் துறையினர் செய்தனர். பின்னர் நீதிமன்ற காவலில் ராஜ்குமார் ராயை சிறையில் அடைத்தனர்.


கோவை மாவட்டத்தில் போதை பொருட்களின் விற்பனையை தடுக்கும் பொருட்டும், அதன் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கையின் பேரில் இந்தாண்டில் மட்டும் காவல் துறையினரால் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட196 நபர்கள் மீது 146 வழக்குகள் பதிவு செய்தும், அவர்களிடமிருந்து சுமார் 427.076 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.




இதேபோல சட்டத்திற்கு புறம்பாக லாரியில் மது பாட்டில்களை கடத்தி வந்த நான்கு நபர்களை காவல் துறையினர் கைது செய்தனர். கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள எலச்சிபாளையம் சாலை வழியாக சட்டத்திற்கு விரோதமாக மது பாட்டில்களை கடத்தி வருவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் எலச்சிபாளையம் சாலையில் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த நான்கு சக்கர வாகனத்தை சோதனை செய்த போது, அதில் சட்டத்திற்கு விரோதமாக மது பாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்து. இதையடுத்து மது பாட்டில்களை கடத்தி வந்த முத்து சரவணன்(44), பிரதீப் (27), பேச்சிமுத்து (43) மற்றும் சிவகுமார் (24) ஆகிய 4 நபர்களை காவல் துறையினர் கைது செய்தனர். அவர்கள் கடத்தி வந்த 1104 பீர் மது பாட்டில்களை மற்றும் கடத்துவதற்கு பயன்படுத்திய லாரியையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் 4 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.


இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் எச்சரித்துள்ளார். போதைப்பொருட்கள் விற்பனை தொடர்பாக பொதுமக்கள் காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண்: 77081-00100 ஆகிய எண்ணையை  தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண