சென்னையில் நடந்த போட்டியின் போது ஏற்பட்ட விபத்தில் ஸ்ரேயாஸ் ஹரீஷ் உயிரிழந்தார்.


சென்னையில் விபத்து:


மெட்ராஸ் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் MRF MMSC fmsci இந்திய தேசிய மோட்டார் சைக்கிள் பந்தய சாம்பியன்ஷிப் 2023 இன் மூன்றாவது சுற்று சனிக்கிழமை தொடங்கியது. இதில் பங்கேற்ற  பெங்களூரைச் சேர்ந்த 13 வயது ப்ராடிஜி கொப்பரம் ஷ்ரேயாஸ் ஹரீஷ், போட்டியின் போது விபத்தில் சிக்கி காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிகழ்வின் காரணமாக விளம்பரதாரரான மெட்ராஸ் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப்,  இன்றும் நாளையும் நடைபெறவிருந்த மீதமுள்ள பந்தயங்களை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.


யார் இந்த ஸ்ரேயாஸ் ஹரீஷ்?


கடந்த 2010ம் ஆண்டு ஜூலை 26ம் தேதி பிறந்த ஸ்ரேயாஸ் ஹரீஸ்,  பெங்களூருவில் உள்ள கென்ஸ்ரி பள்ளியில் பயின்று வந்தார். மோட்டார் சைக்கிள் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட இவர், சிறு வயதில் இருந்தே அதற்கான பயிற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளார். அதைதொடர்ந்து, பல்வேறு போட்டிகளிலும் பங்கேற்று வந்தார்.  தேசிய அளவில் தொடர்ச்சியாக நான்கு போட்டிகள் உட்பட பல பந்தயங்களில் வெற்றி பெற்றதால், மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் இந்தியாவின் வளர்ந்து வரும் நட்சத்திரமாகப் போற்றப்பட்டார். இந்த நிலையில் தான் டிவிஎஸ் நிறுவனத்தின் ஒன்-மேக் சாம்பியன்ஷிப்பின் தொடரின் நடப்பு சீசனில் பங்கேற்றார்.


விபத்து நிகழ்ந்தது எப்படி?


இந்நிலையில், இன்று காலை ரூக்கி பந்தயம் தொடங்கிய உடனேயே இந்த சம்பவம் நிகழ்ந்தது. டர்ன்-1 இல் இருந்து வெளியேறிய ஷ்ரேயாஸின் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகி கட்டுப்பாட்டை இழந்த நிலையில், அவர் தலையில் பலத்த காயம் அடைந்தார். இதை கண்டதும் போட்டி உடனடியாக நிறுத்தப்பட்டு, அங்கு ஏற்கனவே முன்னெச்சரிக்கையாக நிறுத்தப்பட்டிருந்த ட்ராமா கேர் ஆம்புலன்ஸில் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஸ்ரேயாஸ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அப்போது, அவரது தந்தை கொப்பரம் ஹரீஷ் உடனிருந்தார்.


போட்டிகள் ரத்து:


MMSC தலைவர் அஜித் தாமஸ் கூறுகையில், "இளமையும் திறமையும் கொண்ட ஒரு வீரரை இழந்தது சோகமானது. தனது அபாரமான பந்தயத் திறமையால் கவனம் ஈர்த்த ஸ்ரேயாஸுக்கு, சம்பவம் நடந்த உடனேயே மருத்துவ உதவி அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு இந்த வார இறுதியில் நட்டைபெற இருந்த மற்ற போட்டிகளை ரத்து செய்ய முடிவு செய்துள்ளோம். ஸ்ரேயாசின் குடும்பத்தாருக்கு MMSC இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவிக்கிறது" என கூறினார்.


கலைந்த கனவுகள்:


இந்த ஆண்டு மே மாதம், மினிஜிபி இந்தியா பட்டத்தை வென்ற ஷ்ரேயாஸ், ஸ்பெயினில் நடந்த மினிஜிபி பந்தயங்களில் பங்கேற்று, இரண்டு பந்தயங்களையும் ஐந்தாவது மற்றும் நான்காவது இடத்தில் முடித்தார். அவர் ஆகஸ்ட் மாதம் மலேசியாவின் செபாங் சர்க்யூட்டில் MSBK சாம்பியன்ஷிப் 2023 இல் 250cc பிரிவில் (குரூப் B) CRA மோட்டார் ஸ்போர்ட்ஸ் அணி சார்பில் பங்கேற்க இருந்தது குறிப்பிடத்தக்கது.