Wonderla Theme Park Thiruporur: சென்னையில் இந்தியாவிலேயே மிகப்பெரிய ரோலர் கோஸ்டர், திருப்போரூர் அருகே, வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்காவில் அமைய உள்ளது.
வொண்டர்லா (Wonderla Amusement Park) தீம் பார்க்
தீம் பார்க் எப்போதுமே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் முன்னணி தீம் பார்க் நிறுவனமாக, வொண்டர்லா (Wonderla Amusement Park) தீம் பார்க் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் கொச்சி, பெங்களூர், ஹைதராபாத் மற்றும் புவனேஸ்வர் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகிறது.
இந்தியாவில் பல்வேறு தீம் பார்க்குகள் செயல்பட்டு வந்தாலும், வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்காவிற்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. இங்கு இருக்கும் ஒரு சில விளையாட்டு இளைஞர்களை கவர்வதால், இளைஞர்களும் ஆர்வமுடன் வொண்டர்லா சென்று வருகின்றனர். தமிழ்நாட்டில் வொண்டர்லா தீம் பார்க் செயல்படவில்லை என்றாலும், பெங்களூருக்கு தமிழ்நாட்டில் இருந்து ஏராளமான மக்கள் படையெடுக்கின்றனர்.
சென்னையில் வொண்டர்லா தீம் பார்க்
இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வொண்டர்லா தீம் பார்க் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் அரசுடன் இணைந்து போடப்பட்டது. பல்வேறு நிர்வாக சிக்கல் காரணமாக தொடர்ந்து, வொண்டர்லா தீம் பார்க் அமைப்பதற்கான பணிகள் தாமதம் ஆகி வந்தன.
மத்திய மற்றும் மாநில அரசுகள் சுற்றுலா துறையை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் செயல்படாமல் இருந்ததால், சுற்றுலாத்துறை இதை செயல்படுத்துவதற்கு தனி கவனம் செலுத்தியது.
ஒரு வழியாக கிடைத்த அனுமதி:
குறிப்பாக தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை சார்பில் பொழுதுபோக்கு பூங்கா மற்றும் தீம் பார்க் அமைக்கும் நிறுவனங்களுக்கு ஒற்றை சாளர முறைப்படி (Single Window System) அனுமதி வழங்கப்படும் என கொள்கையை அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் டிஸ்னி மற்றும் யூனிவர்சல் ஸ்டுடியோ போன்ற உலக அளவில் இருக்கும் மிக முன்னணி, பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் தீம் பார்க்களை சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் அமைப்பதற்கான நடவடிக்கையில் தமிழக சுற்றுலாத்துறை இறங்கியுள்ளது.
சிறப்பம்சங்கள் என்னென்ன?
இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் தனது ஐந்தாவது கிளையை தமிழ்நாட்டில் வொண்டர்லா நிறுவனம் தொடங்க உள்ளது. சென்னை புறநகர் பகுதியில் உள்ள பழைய மகாபலிபுரம் சாலையில், செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த இள்ளளூரில் 62 ஏக்கர் பரப்பளவில், 510 கோடி ரூபாய் செலவில் இந்த பொழுதுபோக்கு பூங்கா அமைய உள்ளது.
பிரம்மாண்டமாக அமைய இருக்கும் இந்த பொழுதுபோக்கு பூங்காவில், இளைஞர்கள் மற்றும் குழந்தைகளை கவரும் வகையில் புதுவிதமான விளையாட்டுகள் மற்றும் பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டு வர அந்த வொண்டர்லா நிறுவனம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த பொழுதுபோக்கு பூங்காவில் பல்வேறு புதுவிதமான, வித்தியாசமான அனுபவங்களை மக்களுக்கு கொடுக்கும் வகையில் ஏற்பாடுகள் துவங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தியாவின் மிகப்பெரிய ரோலர் கோஸ்டர் - India largest Roller Coaster
இந்த பொழுதுபோக்கு பூங்காவில், (வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்காவில்) உலகப் புகழ்பெற்ற Bolliger & Mabillard எனும் கோஸ்டர் அமைய உள்ளது. இதற்கான அனுமதி கொடுக்கப்பட்டு, அனைத்துவித பணிகளும் முடிவடைந்துள்ளன. இந்த ரோலர் கோஸ்டர் இந்தியாவில் மிகப்பெரிய ரோலர் கோஸ்டராக இருக்கப் போவது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே லண்டன் மற்றும் நியூயார்க் போன்ற நகரங்களில் இருப்பதை போன்று ரோலர் கோஸ்டர் சென்னையிலும் அமைய உள்ளது கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது. இந்த ரோலர் கோஸ்டர் அமைப்பதற்கு மட்டும் 80 கோடி ரூபாய் வரை செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
செயல்பாட்டிற்கு வருவது எப்போது?
2026-ஆம் ஆண்டுக்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். ரோலர் கோஸ்டர் மற்றும் பிற விளையாட்டுகள் அமைக்கும் பணிகள் பெருமளவு முடிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.