கடந்த ஆண்டு மார்ச் மாததில் இருந்து  உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா தொற்றால்  உயிரிழப்பு, பொருளாதாரம் பாதிப்பு என பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  தற்போது கொரோனா தொற்று இரண்டாவது அலையில் அதிக அளவில் பாதிப்பு ஏற்படுகிறது.மேலும் இரண்டாவது அலை கொரோனா தொற்றால்  பெரும் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் மன உளைச்சலுக்கும் பாதிப்புக்கும் ஆளாகி உள்ளனர்.


திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, அந்த வகையில் இன்று ஒரே நாளில் 734 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் 15 மையங்களில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை வார்டில்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை 399 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 



கொரோன தொற்று பயமின்றி பொது மக்கள் வெளியில் சுற்றுவதை தவிற்கும் விதமாகவும் மற்றும் கொரோனாவின் கொடூரத்தை பொது மக்களுக்கு புரிய வைப்பதற்காக இரவு பகல் மழை வெயில் என பாராமலும் பணிபுரிந்து வரும் போலீசார் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்துவது மட்டுமின்றி, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த தலைமை காவலர் ஏழுமலை சினிமா திரைப்பட பாடலை கொரோனா விழிப்புணர்வு பாடலாக பாடியுள்ளார். இந்தப் பாடல் வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வரும் இந்தப் காவலரின் பாடல் அனைவரும் ரசித்து வருகின்றனர். 



தலைமை காவலர் பாடியுள்ள அந்த விழிப்புணர்வு பாடல் இடம் பெற்றுள்ள திரைப்படம், நீ வருவாய் என 1999ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இந்த படத்தின் கதாநாயகனாக பார்த்திபனும், கதாநாயகியாக தேவயானியும் நடித்துள்ளனர். முக்கிய கதாப்பாத்திரத்தில் அஜித் குமாரும், ரமேஷ் கண்ணாவும் நடித்துள்ளனர். எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில், 'ராணுவ வீரரான அஜித்திற்கும், கிராமத்து பெண் தேவயானிக்கும் திருமணம் நிச்சயிக்கப்படும். இருவரும் காதலிக்க துவங்கும்போது, வரும் பாடலான,


"அதிகாலையில் சேவலை எழுப்பி
அதைக் கூவென்று சொல்லுகிறேன்
கடிகாரத்தை சீக்கிரம் திருப்பி
அதன் வேகத்தை மிஞ்சுகிறேன்
இன்னும் வாசலில் கோலத்தை காணவில்லை
உன் வளையொலி கொலுசுகள் கேட்கவில்லை
ஏன் தாமரை பூக்கவில்லை"


என்ற பாடலை கொரோனா விழிப்புணர்வு பாடலாக பாடியுள்ளார்.
இந்த பாடலை பாடிய காவலர் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம்  காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமை காவலர் ஏழுமலை ஆவார். விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சினிமா பாடலை மாற்றி பாடியுள்ள இவருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.


"கொரோனா எங்கள் நாட்டை விட்டு விலகி விடு


சைனா உன்தாயகம் சீக்கிரம் தாண்டி விட்டு


யார் எதுவந்து குடுத்தாலும் வாங்கி விடு  


எங்கள் இந்தியா நாட்டை வாழவிடு  


என் பாடலை கேட்டதும் கிளம்பி விடு" 


என தலைமை காவலர் ஏழுமலை கொரோனா விழிப்புணர்வு பாடலைப் பாடி அசத்தியுள்ளார். இந்தப் பாடல் சமூக வலைதளங்களில் பரவி பொதுமக்களிடையேயும் காவல்துறை வட்டாரத்திலும்  பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.