செங்கல்பட்டு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை


வடகிழக்கு பருவமழை தொடங்கி இருக்கும் நிலையில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த சூழலில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 



 

இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய 14 மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்த செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் கடல் சீற்றத்துடன் காணப்பட்டு வருவதால் கடலுக்கு செல்லவில்லை.



 

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட மகாபலிபுரம், கல்பாக்கம் ,கொக்கிலிமேடு, உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் வீட்டிலேயே உள்ளனர். வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை தொடர்ந்து கல்பாக்கம் மற்றும் மகாபலிபுரம் ஆகிய பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. சில இடங்களில் கடல் சீற்றத்துடன் காணப்பட்ட உள்ளதால் கடல் அரிப்பும் ஏற்பட்டுள்ளது. 

 


காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி:


தெற்கு அந்தமான் கடல்  பகுதிகளில் நிலவி வரும்  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில், குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும் என மணடல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி, புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.  இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில்  காற்றழுத்த தாழ்வு மண்டலமாக 16ஆம் தேதி வாக்கில் நிலவக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு:


14.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி  மற்றும் காரைக்கால் பகுதிகளில்  அநேக  இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், வேலூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.




15.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.


16.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.


மீனவர்களுக்கான எச்சரிக்கை:  


14.11.2023: தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் இலங்கை கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.