திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த காட்டுக்காநல்லூர் கிராமப்பகுதியில் நாகநதி ஆறு செல்கிறது. ஆற்றில் தண்ணீர் செல்வதால் அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்கு குடிநீருக்கும் தங்கு தடையின்றி தண்ணீர் கிடைத்து வருகிறது. நாகநதி ஆற்றில் ஜேசிபி இயந்திரம் மூலம் ஆற்றிலிருந்து மணல் எடுத்து கரையில் குவித்து வருகின்றனர். சமூக விரோதிகள் கரையில் குவித்து வைத்த மணல் ஈரம் காய்ந்தவுடன் சமூக விரோதிகள் மணலை கடத்தி விடுகின்றனர்.


இதுகுறித்து பலமுறை ஆரணி வருவாய்த்துறை அதிகாரிகளிடமும் காவல்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென குற்றம்சாட்டுகின்றனர். அதனால் ஆத்திரமடைந்த நல்லூர் கிராமவாசி மக்கள் மகாநதி ஆற்றில் திடீரென இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 




 


கிராம மக்களிடம் தொடர்பு கொண்டு பேசியபோது , ‛எங்களது கிராமத்தைச் சுற்றிலும் 5 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. விவசாயத்தை நம்பி தான் எங்களுடைய வாழ்வாதாரமே உள்ளது. ஆனால் விவசாயத்திற்கு வாழ்வாதாரமாக திகழ்வது நாகநதி ஆறு. அதனை நம்பிதான் பயிரிட்டு சாகுபடி செய்து வருகிறோம் .தற்போது நாக நதியில் தண்ணீர் செல்கின்றது.  இதில் நாங்க மட்டும் இல்லாமல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள நிலத்தடி நீர்மட்டமும் கணிசமாக உயர்ந்து வருகிறது. அதேபோன்று சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள மக்களுக்கு குடி தண்ணீர் பற்றாக்குறையும் ஆற்றின் மூலம் தீர்த்து வைக்கப்படுகிறது. வரும் காலங்களில் மணல் கொள்ளையர்களால் நாக நதியின் தடையம் மறைந்து போகும். நிலைமை ஏற்பட்டுள்ளது. இரவு பகல் பாராமல் நாகநதி ஆற்றின் மணல் கொள்ளையர்கள் மணலை  சுரண்டுவதாலும் நிலத்தடி நீர்மட்டம் குறைய வாய்ப்புள்ளது. இதனால் குடிதண்ணீர் தட்டுப்பாடும் மற்றும் விவசாயத்திற்கும் தண்ணீர் தேவை தட்டுப்பாடு ஏற்பட்டுவிடும். மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தினால் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் பஞ்சம் ஏற்படாமல் இருக்கும் . மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆரணி வருவாய்த்துறை அதிகாரியிடமும் கண்ணமங்கலம் காவல் நிலையத்திலும் பலமுறை புகார் தெரிவித்து இருந்தோம். ஆனால் அவை எதுவும் பலனளிக்கவில்லை. மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் மீது தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




கடந்த 14ஆம் தேதி காட்டுக்காநல்லூர் பகுதி இளைஞர்கள் நாக நதிக்குச் சென்று மாட்டு வண்டி மூலம் மணல் கடத்துபவர்களை தடுத்து எச்சரித்தனர். இதனால் ஆத்திரமடைந்த மணல் கொள்ளையில் சேர்ந்த நபர் ஆயுதங்களுடன் ஆட்டுக்கால் நல்லூர் கிராமத்திற்கு சென்று அந்த இளைஞர்களிடம் தகராறு செய்து கொலை மிரட்டல் விட்டதாக,’ அப்பகுதி மக்கள் கூறினார்கள். நாகநதி ஆற்றிலிருந்து அள்ளப்பட்டு கரையில் குவித்து வைத்த மணலை புகைப்படம் எடுத்து முதலமைச்சரின் தனிப் பிரிவிற்கும் அனுப்பவிருப்பதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.