Chennai Local Train: சென்னை புறநகர் ரயில்கள் இன்று மதியம் 2 மணிக்கு இயங்கத் தொடங்கியதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 


மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று இரவு வரை கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக சென்னையின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் நேற்று முடங்கிப்போனது. இன்று காலை முதல் வழக்கம்போல வெயில் அடித்தாலும் சென்னை புறநகர் பகுதிகள், தாம்பரம், முடிச்சூர், வரதராஜபுரம், வட சென்னையின் முக்கிய பகுதிகள், வேளச்சேரி, மடிப்பாக்கம்  என சென்னையின் பல பகுதிகளிலும் மழைநீர் இதுவரை வடியவில்லை.


புறநகர் ரயில் சேவை:


இந்த பகுதிகள் மட்டுமின்றி சென்னையில் உள்ள ரயில்வே வழித்தடங்களிலும் மழைநீர் இடுப்பளவு தேங்கியது. பல ரயில் நிலையங்களில் ப்ளாட்பாரம் உயரத்திற்கு மழைநீர் தேங்கியிருக்கிறது. இதன் காரணமாக, மின்சார ரயில்களை இயக்குவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் புறநகர் ரயில் சேவை நேற்று முற்றிலும் ரத்து செய்யப்பட்டது.  தண்டவாளங்களில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணியில் ரயில்வே பணியாளர்கள் முழுவீச்சில் ஈடுபட்டு வந்தனர். மிக்ஜாம் புயல் காரணமாக இன்று மின்சார ரயில் இயக்கப்படாத காரணத்தால், புறநகர் பகுதியில் இருந்து சென்னைக்குள் வேலைக்கு வருபவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 


மீண்டும் இயக்கம்:






இந்த நிலையில், சென்னை புறநகர் ரயில்கள் இன்று மதியம் 2 மணிக்கு இயங்கத் தொடங்கியதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இன்று இயக்கப்பட்ட அட்டவணைப்படி நாளையும் புறநகர் ரயில்கள் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  இதனால், சென்னை கடற்கரை – செங்கல்பட்டு, சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி, சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் வரையிலான வழித்தடத்தில் ரயில்கள் இயங்கும்.


இதுகுறித்து தெற்கு ரயில்வே கூறியதாவது, சென்னை எழும்பூர் - தாம்பரம் - செங்கல்பட்டு இடையே அரை மணி நேரத்திற்கு ஒரு முறை ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல, சென்னை கடற்கரை - திருவள்ளூர் - அரக்கோணம் இடையே அரை மணி நேரத்திற்கு ஒரு முறை ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.  மேலும், திருவொற்றியூர் - கும்மிடிப்பூண்டி இடையே ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த அட்டவணைப்படியே நாளை (டிசம்பர் 06) வரை புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.