தமிழ் நிலம் ஜியோ ஆஃப் ; 

Continues below advertisement


தமிழகத்தில் நிலங்கள் குறித்த வருவாய் துறை ஆவணங்கள் மற்றும் தகவல்கள் , தமிழ் நிலம் தகவல் தொகுப்பில் இணைக்கப்பட்டு உள்ளன. இதில் ஒரு குறிப்பிட்ட நிலத்தின் அமைவிடம் , சர்வே எண் விபரங்களை உள்ளீடு செய்தால் , அதன் பட்டா விபரங்களை மக்கள் அறியலாம்.


இந்த வசதியை எளிமைப்படுத்தும் வகையில் , தமிழ் நிலம் ஜியோ இன்போ என்ற புதிய செயலி , இந்த ஆண்டு ஜனவரியில் துவக்கப்பட்டது. இந்த செயலியை பொதுமக்கள் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து எளிதாக பயன்படுத்தலாம் என்றும் , வருவாய் துறை அறிவித்தது.


அதாவது , மாவட்டம் , தாலுகா , கிராமம் , சர்வே எண் போன்ற விபரங்களை உள்ளீடு செய்து , பட்டா, 'அ' பதிவேடு , நில வரை பட விபரங்களை பெறலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி , சர்வே எண் போன்ற அடிப்படை விபரங்கள் இல்லா விட்டாலும் , கூகுள் வரைபடத்தில் நீங்கள் தேர்வு செய்யும் இடத்தின் சர்வே எண் , பட்டா எண் , வரைபட விபரங்களை அறியவும் வசதி செய்யப்பட்டது.


புதிதாக வீடு , மனை வாங்கும் மக்கள் , இந்த செயலியை பயன்படுத்தி , சொத்துக்கள் குறித்த உண்மையான தகவல்களை பெறலாம் என, வருவாய் துறை தெரிவித்தது. ஆனால் , அந்தத் துறையின் அதிகாரிகள் , இந்த செயலியில் தேவையான தகவல்களை பதிவேற்றம் செய்யாமல் முடக்கி வைத்துள்ளனர் என்ற புகார் எழுந்துள்ளது.


இதுகுறித்து பொது மக்கள் கூறியதாவது ; 


நிலம் தொடர்பான விபரங்களை , பொதுமக்கள் மொபைல் போன் வாயிலாக எளிதாக அறிய , முதல்வர் அறிவிப்பு அடிப்படையில் இந்த செயலி உருவாக்கப்பட்டது.


செயலி முறையாக செயல்பட்டால் , நில விபரங்களை தேடி பொது மக்கள் , கிராம நிர்வாக அலுவலர் முதல் தாசில்தார் வரை உள்ள அதிகாரிகளை நாடி செல்ல வேண்டியதிருக்காது.


ஆனால் , அவ்வாறு நடந்தால், தங்களுக்கான வசூல் பாதிக்கப்படும் என்பதால் , வருவாய் துறையினர் இதில் உரிய தகவல்களை பதிவேற்றம் செய்ய மறுப்பதாக தெரிகிறது.


இது போன்ற வசதியை துவக்கி வைத்த அதிகாரிகள் இதன் தொடர் செயல்பாடுகளை கண்காணிக்க தவறியதே பிரச்னைக்கு காரணம் என இவ்வாறு அவர்கள் கூறினர்.