சென்னை, தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைப்பது தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியார்களை சந்தித்தார் : 

 

தமிழ்நாட்டில் புதிய 25 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 25 நகர்ப்புற சுகாதார நிலையங்கள் அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, 2127 ஆரம்ப சுகாதார நிலையம் நகர்ப்புற சுகாதார நிலையங்கள் உள்ளது. புதிய 50 சுகாதார நிலையங்கள் அமைக்கப்படுவதால் அதன் எண்ணிக்கை 2177ஆக உயர்வு பெறும் என்றார். 

 

கடந்த 6 ஆண்டுகளாக புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படாமல் உள்ளது எனவும், எம்எல்ஏ.க்கள் சட்டமன்ற கூட்டத்தொடரில் புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்க கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் தற்போது 50 சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட்ட உள்ளதாக தெரிவித்தார். 

 

8 கி.மீட்டருக்கு ஒரு சுகாதார நிலையமும், 20 ஆயிரம் பேர் கொண்ட ஊர்களுக்கு ஒரு சுகாதார நிலையம் என்ற வழிகாட்டுதல் இருந்தது. ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 1.26 கோடி ரூபாய்  செலவாகும் எனவும் அதற்கு கட்டுமான ஊதியமாக 1.12 கோடி செலவாகும் என்றார். 

 

முதலாண்டு நிதியாக ஆரம்ப சுகாதார நிலையம் பணி முடிக்க ரூபாய் 120 கோடி செலவாகும். அதில் மாநில அரசின் நிதி பங்களிப்பு 40%, ஒன்றிய அரசின் பங்களிப்பு 60% என்றார். மேலும், அரசாணை வெளியிட்டவுடன் கட்டுமான பணிகள் தொடங்கும் என்றார். 

 

*வருகின்ற 30ம் தேதி அந்தியூர் தொகுதியில் உள்ள பர்கூர் பகுதியில் உள்ள 4 மலைக்கிராம மக்களுக்கான மருத்துவ சேவைக்கான ஆய்வு செய்ய இருப்பதாகவும் கூறினார்.*

 

*2.3 கோடி பேர் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் தொடர் சிகிச்சையின் மூலமாக மருந்து பெட்டகங்கள் வழங்கி இருக்கிறோம்.*

 

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் 93 லட்சத்து 60 ஆயிரத்து 434 பேர் முதல் முறை சிகிச்சை பெற்று இருக்கிறார்கள். இன்னும் சில நாட்களில் ஒரு கோடியை தொட உள்ளது. 1 கோடியை இலக்காக வைத்து இந்த திட்டம் தொடங்கப்பட்டது. 1 கோடி தொட உள்ள நிலையில் அந்த 1 கோடியாவது மருந்து பெட்டகம் பெரும் நபருக்கு முதலமைச்சர் முக.ஸ்டாலின் மருந்து பெட்டகம் வழங்க இருப்பதாக கூறினார். 

 

இன்னுயிர் காப்போம் திட்டத்தின் மூலம் 678 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்க திட்டம் தொடங்கப்பட்டது. 

 

சாலை விபத்துக்குள்ளானவர்களுக்கான 48 மணி நேர சேவை திட்டத்தில் இதுவரை சாலை விபத்தில் சிக்கிய 1லட்சத்து 22 ஆயிரத்து 172 பேர் பயன் பெற்றுள்ளனர். அதற்காக தமிழ்நாடு அரசு 108,96,37,422 ரூபாய் செலவு செய்துள்ளது என்றார். 

 

தமிழ்நாடு முழுவதும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் தீபாவளி வெடி வெடிக்கும் போது ஏற்படும் தீ விபத்து, தீக்காயங்களுக்கு சிகிச்சை மேற்கொள்வதற்காக 5 லிருந்து 10 படுக்கைகள் வரை தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் உயரே பறக்கக்கூடிய பட்டாசுகளையும், அதிக சத்தம் எழுப்பக்கூடிய பட்டாசுகளையும் வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என்றார்.