பிளஸ் 1 பொதுத் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களும் தேர்வை எழுதாத மாணவர்களும் துணைத் தேர்வை எழுத இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாணவர்கள் ஜூன் 29 முதல் ஜூலை 6 வரை விண்ணப்பிக்கலாம்.


பள்ளி மாணவர்கள்‌ விண்ணப்பிக்கும்‌ வழிமுறைகள்‌


மே 2022 மேல்நிலை முதலாம்‌ ஆண்டு பொதுத்தேர்வினை பள்ளி மாணவர்களாக எழுதித் தேர்ச்சி பெறாத / வருகை புரியாத மாணவர்கள்‌, தேர்ச்சி பெறாத/ வருகை புரியாத பாடங்களை மீண்டும்‌ எழுத அவர்கள்‌ பயிலும்‌ பள்ளியில்‌ 29.06.2022 (புதன்‌ கிழமை) முதல்‌ 06.07.2022 (புதன்‌ கிழமை) வரையிலான நாட்களில்‌ ( 03.07.2022 ஞாயிற்றுக்‌ கிழமை நீங்கலாக) காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணிக்குள்‌ விண்ணப்பிக்க வேண்டும்‌.


தனித்தேர்வர்கள்‌ விண்ணப்பிக்கும்‌ வழிமுறைகள்‌


ஆகஸ்ட்‌ 2022 மேல்நிலை முதலாம்‌ ஆண்டு துணைத்‌ தேர்விற்கு தற்போது விண்ணப்பிக்க விரும்பும்‌ தகுதியுள்ள தனித்தேர்வர்களும்‌ மற்றும்‌ மே 2022 மேல்நிலை முதலாம் ‌ஆண்டு (41) பொதுத்‌ தேர்வினை எழுதி தேர்ச்சி பெறாத / வருகை புரியாத தனித்தேர்வர்களும்‌ 29 .06 .2022 (புதன்‌ கிழமை) முதல்‌ 06.07.2022 (புதன்‌ கிழமை) வரையிலான நாட்களில்‌ ( 03.07.2022 ஞாயிற்றுக்‌ கிழமை நீங்கலாக) காலை 10.00 மணி முதல்‌ மாலை 5.0௦ மணிக்குள்‌ கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத்‌ தேர்வுகள்‌ சேவை மையங்கள்‌ வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்‌.


விண்ணப்பங்களை ஆன்‌லைனில்‌ பதிவு செய்வதற்கு அமைக்கப்பட்டுள்ள அரசுத்‌ தேர்வுகள்‌ சேவை மையங்கள், கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத்‌ தேர்வுகள்‌ சேவை மையங்களின்‌ விவரங்கள்‌ மற்றும்‌ ஆன்லைனில்‌ விண்ணப்பங்கள்‌ பதிவு செய்தல்‌ குறித்த தனித்தேர்வர்களுக்கான தகுதி மற்றும்‌ அறிவுரைகள்‌ ஆகியவற்றை https://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில்‌ விண்ணப்பதாரர்கள்‌ அறிந்து கொள்ளலாம்‌. 


மேலும்‌, அனைத்து முதன்மைக்‌ கல்வி அலுவலர்‌ அலுவலகங்கள்‌, அனைத்து மாவட்டக்‌ கல்வி அலுவலர்‌ அலுவலகங்கள்‌ மற்றும்‌ அனைத்து அரசுத்‌ தேர்வுகள்‌ உதவி இயக்குநர்‌ அலுவலகங்கள்‌ வாயிலாகவும்‌ அறிந்து கொள்ளலாம்‌. 




சிறப்பு அனுமதித்‌ திட்டம்‌


29 .06 .2022 (புதன்‌ கிழமை) முதல்‌ 06.07.2022 (புதன்‌ கிழமை) வரையிலான நாட்களில்‌ ஆகஸ்ட்‌ 2022 மேல்நிலை முதலாம்‌ ஆண்டு துணைத்‌ தேர்விற்கு விண்ணப்பிக்கத்‌ தவறும்‌ தேர்வர்கள்‌, சிறப்பு அனுமதித்‌ திட்டத்தில்‌ உரிய கட்டணத்‌ தொகையுடன்‌ 07.07.2022 ( வியாழக்‌கிழமை) முதல்‌ 09.07.2022 (சனிக்‌ கிழமை) வரையிலான நாட்களில்‌ ஆன்‌லைனில்‌ விண்ணப்பிக்க வேண்டும்‌.


மேல்நிலை முதலாம்‌ ஆண்டு தேர்விற்கு சிறப்பு அனுமதிக்‌ கட்டணம்‌ - ரூ.1000/-


தேர்வுக்கூட அனுமதிச்‌ சீட்டுகள்‌ விநியோகம்‌



ஆன்‌லைனில்‌ விண்ணப்பத்தினை பதிவு செய்த பிறகு, தேர்வர்களுக்கு ஒப்புகைச்‌ சீட்டு வழங்கப்படும்‌. அதில்‌ குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே அரசுத்‌ தேர்வுத்‌ துறை பின்னர்‌ அறிவிக்கும்‌ நாளில்‌ தேர்வுக்கூட நுழைவுச்‌ சீட்டுகளைப் பதிவிறக்கம்‌ செய்ய இயலும்‌ என்பதால்‌, ஒப்புகைச்‌ சீட்டினை தனித்தேர்வர்கள்‌ பாதுகாப்பாக வைத்துக்‌ கொள்ள வேண்டும்‌.


தேர்வர்‌ தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையம்‌ குறித்து தேர்வுக்கூட அனுமதிச்சீட்டில்‌ அறிந்து கொள்ளலாம்‌. தேர்வு முடிவுகள்‌ வெளியிடப்படும்‌ வரை தனித்தேர்வர்களுக்குத்‌ தேர்வெழுத வழங்கப்படும்‌ அனுமதி தற்காலிகமானது எனவும்‌, தனித்தேர்வர்களின்‌ விண்ணப்பம்‌ மற்றும்‌ தகுதி குறித்து ஆய்வு செய்யப்பட்ட‌ பின்னரே தேர்வு முடிவுகள்‌ வெளியிடப்படும்‌ எனவும்‌ அறிவிக்கப்படுகிறது.


மேலும்‌, இத்தேர்வுகள்‌ சார்ந்த விரிவான தகவல்களை https://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில்‌ காணலாம்‌.