விசாரணைக்கு தனியார் ஓட்டுநர்

 

சென்னை பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் ராணி. இவர் தனக்கு காவல்துறை சார்பில் ஒதுக்கப்பட்ட போலீஸ் ஜீப்பை ஓட்டுவதற்கு, தனியாக தனது சொந்த செலவில் ஓட்டுநர் ஒருவரை நியமித்ததுடன் இவரது சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் ஏற்படும் விபத்துகள் குறித்து விசாரணை நடத்த செல்லும் போது அந்த தனியார் ஓட்டுநரை அழைத்துக்கொண்டு, அலுவலக ஜீப்பில் செல்வதாக குற்றசாட்டுக்கள் எழுந்தது.

 

பொதுமக்களை மிரட்டினாரா ஆய்வாளர் ?

 

மேலும் விபத்து நடந்த இடத்திற்கு, அவருக்கு வேண்டிய வழக்கறிஞர்கள் சிலரை வரவழைத்து பின்னர் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துவிட்டு, அவருக்கு வேண்டிய வழக்கறிஞர்கள் மூலம் இழப்பீடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடருமாறு, பாதிக்கப்பட்ட பொதுமக்களை வற்புறுத்தி வந்ததாக தொடர்ந்து அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருந்தது. அதனை ஏற்க மறுக்கும் பொதுமக்களை, ஆய்வாளா் என்ற முறையில், அவர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் இழப்பீடாக கிடைக்கும் பணத்தில், ஒரு பகுதியை அவர் எடுத்துக் கொள்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது.

 

ஏற்கனவே உளவுத்துறை போலீசார்..!

 

இதுதொடர்பாக பொதுமக்கள் சிலர் தாம்பரம் சரக காவல் ஆணையர் அமல்ராஜிடம் புகார் அளித்தனர். அதுமட்டுமின்றி உளவுத்துறை போலீஸாரும் ஏற்கெனவே ஆய்வாளர் ராணி மீது உள்ள குற்றச்சாட்டுகளை அறிக்கையாக தாம்பரம் சரக ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து தாம்பரம் காவல் ஆணையர் இந்த புகார் குறித்து விசாரிக்குமாறு பள்ளிக்கரணை துணை ஆணையர் ஜோஸ் தங்கையாவிற்கு உத்தரவிட்டார். அதன்பேரில் துணை ஆணையர் ஜோஸ் தங்கையா நடத்திய விசாரணையில் ஆய்வாளர் ராணி மீதான குற்றச்சாட்டுகள் உண்மை என தெரியவந்ததை அடுத்து அதனை அறிக்கையாக காவல் ஆணையரிடம் தாக்கல் செய்தார். இதனையடுத்து பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு ஆய்வாளர் ராணி கடந்த ஆகஸ்ட் மாதம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தொடர் விசாரணையில் போக்குவரத்து ஆய்வாளர் ராணி மீதான குற்றச்சாட்டு உறுதியானதை அடுத்து ஆய்வாளர் ராணியை இன்று பணிநீக்கம் செய்து தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.