தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் காலை முதலே கடும் வெயில் பொது மக்களை வாட்டி வதைத்த நிலையில் மாலை நேரத்தில் கரு மேகங்கள் சூழ்ந்து சில்லென்று காற்று வீசத்தொடங்கியது.

 

அதன்பின் இரவு நேரத்தில் சாரல் மழை பெய்யத் துவங்கி திடீரென இடி மின்னலுடன் கூடிய கனமழையானது கொட்டி தீர்க்க தொடங்கியது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான ஓரிக்கை,பெரியார் நகர்,செவிலிமேடு,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,பேருந்து நிலையம், பூக்கடைச்சத்திரம், ஒலிமுகமதுபேட்டை, பொன்னேரிக்கரை, சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, வாலாஜாபாத், சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், படப்பை உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள பிற பகுதிகளிலும் சுமார் 2 மணி நேரங்களுக்கு மேலாக இடிமின்னலுடன் கனமழையானது கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழை வெள்ள நீரால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி தங்களது வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாரே மழை வெள்ள நீரை கடந்து சென்றனர். மேலும் இரவு நேரத்தில் தொழிற்சாலை மற்றும் வெளியூர்களில் இருந்து பணி முடிந்து வீடு திரும்பியவர்கள் கனமழையினால் கடுமையாக பாதிக்கப்பட்டனர். காலை முதலே கடும் வெயில் பொது மக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில் இரவு நேரத்தில் கொட்டித் தீர்த்த கனமழையினால் குளிர்ச்சியான சூழல் நிலவியதாலும், நீர் நிலைகள் சற்று நிரம்ப துவங்கியதாலும் பொது மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

 



 

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.

 

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு, தமிழகப் பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, 27, 28, 29, 30 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும்.

 

27-ம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களிலும், 28-ம் தேதி நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், கடலூர், திருப்பத்தூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.



 

29-ம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர் மாவட்டங்களிலும், 30-ம் தேதி நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சிலபகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும்.