வங்கியில் இருந்து 4 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் கைதான சுரானா குழுமத்தின் இயக்குநர்கள் உள்ளிட்ட நான்கு பேர் ஜாமீன் கோரி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

 

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் 'சுரானா இண்டஸ்ட்ரியல் லிமிடெட்' நிறுவனம், 'சுரானா பவர் லிமிடெட்' மற்றும் 'சுரானா கார்ப்பரேஷன் லிமிடெட்' ஆகியவை, ஐ.டி.பி.ஐ. எஸ்.பி.ஐ வங்கியிடமிருந்து சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை கடனாக பெற்று, அதைத் திருப்பிச் செலுத்தாமல் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

 

சுரானா இண்டஸ்ட்ரியல் லிமிடெட் நிறுவனம், 1301.76 கோடி ரூபாய் ஐ.டிபி.ஐ வங்கியில் இருந்தும், சுரானா பவர் லிமிடெட் ஐ.டி.பி.ஐ வங்கியில் 1495.76 கோடி ரூபாய் கடனும், சுரானா கார்ப்பரேஷன் லிமிடெட் 1,188.56 கோடி ரூபாய் எஸ்.பி.ஐ வங்கியில் இருந்து கடன் பெற்று, இந்த கடன் தொகையை திருப்பி செலுத்தாமல் மோசடி செய்ததாக, அந்த நிறுவனங்களுக்கு எதிராக சி.பி.ஐ.,வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. 

 

இந்நிலையில், இந்த கடன் தொகையை சட்ட விரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக, அந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் தினேஷ் சந்த் சுரானா, விஜயராஜ் சுரானா மற்றும் நிறுவன ஊழியர்கள் ஆனந்த், பிரபாகரன் ஆகியோர் மீது, அமலாக்கத்துறையும்  வழக்குப் பதிவு செய்தது. 

 

இந்த வழக்கில் தொடர்புடைய நால்வரையும், இம்மாதம் 12ஆம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது. இதையடுத்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன் ஆஜர்படுத்தப்பட்ட நால்வருக்கும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், இந்த வழக்கில் நால்வரும் ஜாமீன் கோரி, தாக்கல் செய்த மனு முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்  விசாரணைக்கு வந்தது. பின்னர் வழக்கை ஆகஸ்ட் 2ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்து உத்தரவிட்டார்.