சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் கீழ் பயிற்சி அளிக்கப்பட்டு கடந்த 2011ம் ஆண்டு முதல் 10 வருடங்களாக துப்பறியும் பிரிவில் பணிபுரிந்து வந்த ராஜி, பாதல் ஆகிய 2 மோப்ப நாய்கள் இன்று ஓய்வு பெற்றன.இந்த 2 நாய்களும் சென்னை விமான நிலைய பாதுகாப்பிற்காக மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் கடந்த 10 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தனர். இந்த இரண்டு நாய்களும் விமான நிலையத்தில் துல்லியமாக மோப்ப சக்திகளுடன் வெடிபொருட்களை கண்டுபிடிக்க கூடிய திறனுடையது. மேலும் பல அதிகாரிகளிடம் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

இந்தநிலையில் இந்த 2 நாய்களும் ஓய்வு பெற்று உள்ளது. ஒய்வு பெற்றதால் பதிலாக புதியதாக  தேஜஸ், புரோனோ, வெற்றி ஆகிய 3 நாய்கள் பணியில் சேர்க்கப்பட்டு உள்ளன. ஓய்வுபெற்ற 2 நாய்களை பாராட்டி வழியனுப்பு விழாவும், புதிதாக பணியில் சேர்க்கப்பட்டு உள்ள 3 நாய்களை அறிமுகம் செய்து வரவேற்கும் விழா நிகழ்ச்சி ஆலந்தூரில்  உள்ள மத்திய தொழிற் பாதுகாப்புப்படை அலுவலகத்தில் நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில் சென்னை விமான நிலைய ஆணையக இயக்குனர் சரத்குமார், மத்திய தொழில் பாதுகாப்பு படை டி.ஐ.ஜி. ஸ்ரீராம், கால்நடை மருத்துவர் பரணி ஆகியோர் கலந்து கொண்டு ஓய்வு பெற்ற 2  நாய்களுக்கு மெடல் மற்றும் மாலைகள் அணிவித்து சான்றிதழ்கள் வழங்கினர்.

 

மேலும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள மூன்று நாய்களை அறிமுகப்படுத்தி மாலைகள் அணிவிக்கப்பட்டது. புதிதாக சேர்க்கப்பட்டு உள்ள 3 நாய்கள் வெடி பொருட்களை கண்டுபிடிக்கும் விதமாக ஒத்திகை செய்முறைகள் நடத்தப்பட்டது. இதையடுத்து ஓய்வு பெற்ற 2 நாய்களையும் மத்திய தொழில் பாதுகாப்பு போலீஸ் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் கயிறு கட்டி இழுத்துச் சென்று மரியாதை செலுத்தினர். மத்திய தொழில் பாதுகாப்பு வீரர்கள் 2 நாய்களையும் தத்து எடுத்து கொண்டனர். 



இதுகுறித்து விமான நிலைய ஆணையக இயக்குனர் சரத்குமார் கூறுகையில், பாதல், ராஜி என்ற இரண்டு நாய்களும் பத்து வருடங்கள் பணி முடிந்து ஓய்வு பெறுகிறது. இது மிகவும் உணர்ச்சிகரமான நாள். இரண்டு நாய்களும் கடந்த பத்து வருடமாக சிறந்த முறையில் பணியாற்றி வந்தன.இரண்டு நாய்கள் ஓய்வு பெற்றாலும் புதிதாக பணியில் மூன்று நாய்கள் சேர்க்கப்பட்டு உள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. இவை விமான பயணிகளின் பாதுகாப்புக்காக செயல்படும். நாய்களுடன் நம் நண்பனாக பழக வேண்டும் அதை எதிரியாக பார்க்கக்கூடாது என்றார். 

 

மேலும் இது குறித்து கால்நடை மருத்துவர் பரணி கூறுகையில்,கடந்த பத்து வருடங்களாக நான் ராஜி, பாதல் என்ற இரண்டு நாய்களுக்கு மருத்துவ உதவி அளித்து வருகிறேன். இந்த இரண்டு நாய்களும் வெடி பொருட்களை துல்லியமாக கண்டுபிடிக்க கூடிய திறனுடையது. இரண்டு நாய்களும் பத்து வருடங்கள் எங்களுடன் பழகி தற்போது ஓய்வு பெறுவது எங்களுக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. இது மறக்க முடியாத நாள். எங்கள் குடும்பத்தில் இருந்து ஒருவர் பிரிந்து செல்வது போல் உணர்கிறேன் என்றார்.

 

மத்திய தொழில் பாதுகாப்பு படை டி,ஐ,ஜி ஸ்ரீராம் கூறுகையில், சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் குழுவில் இந்த நாய்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த நாய்களுக்கு அனைத்து விதமான பயிற்சிகளும் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் அளித்து வந்தனர். இந்த இரண்டு நாய்களுக்கும் பத்து வருட பணி முடிந்து விட்டததால் ஓய்வு பெறுகின்றன. மேலும் தற்போது மூன்று புதிய நாய்கள் பணியில் சேர்க்கப்பட்டள்ளன. முக்கிய சூழ்நிலைகளில் வெடிகுண்டுகளை மோப்பம் பிடிக்க இந்த நாய்கள் மிகவும் உதவிகரமாக இருந்தன.  தற்போது இரண்டு நாய்களும் ஓய்வுபெறுவது மிகவும் வருத்தமாக உள்ளது என தெரிவித்தார்